பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியுடன் நட்சத்திர வீரர் விராட் கோலி எப்போது இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. 15 ஆண்டு கால வரவாற்றில் ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை.

இதனை நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்ற ஆர்சிபி அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆர்சிபி அணி தரப்பில் பயிற்சி முகாம் சில வாரங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் வீரர்கள் பலரும் பங்கேற்ற இந்த முகாமில் ஜூனியர் வீரர்களுக்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கேப்டன் டூ பிளஸிஸ், பயிற்சியாளர் ஆண்டி பிளவர் உள்ளிட்ட பலரும் ஆர்சிபி பயிற்சி முகாமிற்கு திரும்பியுள்ளனர்.
இருப்பினும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இதுவரை ஆர்சிபி அணியின் பயிற்சி முகாமிற்கு திரும்பவில்லை. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய விராட் கோலி, அதன்பின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு உதவியளிக்கும் வகையில் 2வது குழந்தையின் பிரசவத்திற்காக லண்டன் சென்றார்.
இதனால் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதன்பின் இதுவரை இந்தியா திரும்பாத விராட் கோலி, ஐபிஎல் தொடரில் விளையாட வருவாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் ஆர்சிபி அணியின் பயிற்சி முகாம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.
மார்ச் 19ஆம் தேதி ஆர்சிபி தரப்பில் பெங்களூர் மைதானத்தில் அன்பாக்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. ஆனாலும் இதுவரை விராட் கோலி வரவில்லை. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகிகள் தரப்பில் பேசுகையில், விராட் கோலி இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா திரும்புவார். அதன்பின் ஆர்சிபி அணியுடன் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேப்ப்பாக்கம் மைதானத்தில் தோனி - விராட் கோலி இருவரும் கடைசி முறையாக விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.