பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி போட்டியை காண வந்த விராட் கோலி ரசிகர் செய்த சம்பவம் ஒன்றுக்கு அங்கிருந்த மைதான ஊழியர்கள் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 49 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் விளாசினார். தற்போது கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர்கள் என்றால் அது தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தான். இந்த வீரர்களை எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் சில வெறியர்களுக்கு இந்த கிரிக்கெட் வீரர்கள் கடவுளாகவே இருக்கிறார்கள்.
எப்படியாவது கிரிக்கெட் வீரர்கள் காலில் விழுந்து விட வேண்டும் என்பதுதான் இவர்களின் ஆசையாக இருக்கிறது. இந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி மைதானத்திற்கு ஓடி வந்தார்.
அப்போது அவர் விராட் கோலியின் காலில் விழுந்து அவரை கட்டி அணைக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை இழுத்துச் சென்றனர். எப்போதும் இது போல் இழுத்துச் செல்லப்படும் நபருக்கு என்ன நடக்கும் என்று நம் யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த விஷயத்தில் ரசிகர் ஒருவர் மைதானத்தில் இருந்தவாறு வீடியோ எடுத்து இருக்கிறார்.
அதில் விராட் கோலியை கட்டிப்பிடித்த அந்த ரசிகரை இழுத்துச் சென்ற போலீசார் மைதானத்திற்கு உள்ளேயே மொத்தமாக நின்று அவரை அடித்து உதைத்து இருக்கிறார்கள். இந்த அடி உதையை தாங்க முடியாமல் அந்த ரசிகர் கதறுகிறார். அதன் பிறகு மற்றொரு போலீசார் அந்த ரசிகரை இழுத்துச் சென்றார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படி ஒரு தவறை செய்தால் ரசிகரை சிறையில் அடைத்து தண்டனை கொடுக்கலாம். ஆனால் இப்படி அடித்து மிதிப்பது சரியான விஷயமா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். அந்த ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் குரல் எழுந்துள்ளது.