பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக புதிய ரோலை ஏற்க வாய்ப்புள்ளதாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி என்பதாலும், தோனி மற்றும் விராட் கோலி களமிறங்கவுள்ளதாலும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக லண்டனில் முகாமிட்டுள்ள விராட் கோலி, இன்னும் சில நாட்களில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஐபிஎல் தொடரின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், விராட் கோலி எந்த போட்டியையும் மிஸ் செய்ய வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக புதிய ரோலை ஏற்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி வில்லியர்ஸ் பேசுகையில், நான் சொல்லும் விஷயம் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஆர்சிபி அணியின் சில வீரர்களுடன் நேரம் செலவிட அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதற்கான இறுதி முடிவை ஆர்சிபி அணி நிர்வாகம் தான் எடுக்க வேண்டும். நிச்சயம் அந்த முடிவினை ஆண்டி பிளவர், ஃபஃப் டூ பிளஸிஸ் தான் எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில், ஐபிஎல் தொடரின் முதல் ஒரிரு வாரங்கள் வர்ணனை பணிக்காக மும்பையில் நிச்சயம் இருப்பேன். அதுதான் என் திட்டமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆர்சிபி அணியின் பயிற்சி முகாமில் டி வில்லியர்ஸ் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. விராட் கோலி - டி வில்லியர்ஸ் இருவரும் நெருங்கிய நட்பில் இருக்கும் சூழலில், விராட் கோலி அழைப்பின் பேரில் டி வில்லியர்ஸ் நிச்சயம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நீண்ட காலமாக ஆர்சிபி அணியின் ஆலோசகராக டி வில்லியர்ஸ் நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தகக்து.