தரம்சாலா : 2024 ஐபிஎல் தொடரில் ரன் மெஷினாக மாறி விராட் கோலி ரன் குவித்து வருகிறார். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிக முக்கிய ஐபிஎல் சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அவர் ஏழு ஃபோர் மற்றும ஆறு சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் மூன்று ஐபிஎல் அணிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் அதிகமான ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன் ஒரே வீரர் இரண்டு அணிகளுக்கு எதிராக மட்டுமே ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்து இருக்கின்றனர்.
அந்த சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி மூன்று அணிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். விராட் கோலி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்துள்ளார்.
முன்னதாக ரோஹித் சர்மா இரண்டு அணிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக இந்த சாதனையை செய்துள்ளார். அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக டேவிட் வார்னர் ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்து இருக்கிறார். தற்போது அவர்கள் இருவரையும் முந்தி இருக்கும் விராட் கோலி மூன்று அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட இருக்கிறார்.