சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த இரண்டு மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தது, அவருடைய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது.
தன்னுடைய மனைவியின் பிரசவத்திற்காக இந்த விடுமுறையை அவர் எடுத்துக் கொண்டது பின்னாளில் தெரியவந்தது. இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் கிரிக்கெட் விளையாடும் பணிக்கு திரும்பி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு விராட் கோலி களமிறங்குவதால், அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இரண்டு மாதம் எந்தவித போட்டியிலும் விளையாடாமல் பங்கேற்கும் கோலி, தன்னுடைய பழைய பேட்டிங் ஃபார்மை தொடர்வாரா? இல்லை கிரிக்கெட் போட்டிகள் விளையாடாமல் இருந்தது அவருடைய ஆட்டத்திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் விராட் கோலியை வரும் டி20 உலக கோப்பை தொடரில் சேர்க்கக்கூடாது என்று பிசிசிஐயில் பேசிக் கொண்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி அவருடைய ஈகோவை நிச்சயம் பாதித்திருக்கும். இதனால் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபிப்பதற்கு ஐபிஎல் தொடரை விராட் கோலி பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு திரும்பி உள்ளதால் அவர் உடல் நலமும் மனமும் நிச்சயம் புத்துணர்ச்சியை பெற்றிருக்கும். இதனால் புதிய விராட் கோலியை ரசிகர்கள் பார்க்க உள்ளனர். இந்த நிலையில் முதல் போட்டியில் சாதனை நாயகன் விராட் கோலி ஒரு மாபெரும் மைல்கல்லை எட்ட இருக்கிறார். அதாவது சிஎஸ்கே அணிக்கு எதிராக விராட் கோலி இதுவரை 99 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதனால் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் விராட் கோலி ஒரு ரன் எடுத்தால், சிஎஸ்கே எதிராக 1000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற மைல் கல்லை எட்டுவார். அதுவே கோலி 58 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ஷிகர் தவான் சாதனையை கோலி முறியடிப்பார். மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர் சி பி வீழ்த்த 16 ஆண்டுகள் ஆவதால் இந்த சோகத்தையும் கோலி தன்னுடைய பேட்டிங் மூலம் தீர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.