பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இரண்டு மாதங்கள் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். தன்னுடைய மனைவிக்கு பிரசவம் நேரம் என்பதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை விட்டு சென்றார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு திரும்பி இருக்கும் விராட் கோலி தற்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலியிடம் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே,

கடந்த இரண்டு மாதம் நீங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தீர்கள் இந்த பொழுதை எப்படி கழித்தீர்கள்? அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா என கேட்டார். இதற்கு பதில் அளித்த விராட் கோலி இந்த இரண்டு மாதமும் நான் இந்தியாவில் இல்லை. என்னை யார் என்றே தெரியாத ஒரு நாட்டிற்கு சென்று அங்கு தான் இரண்டு மாதம் என்னுடைய நேரத்தை கழித்தேன்.
இரண்டு மாதம் என்னை ஒரு சாதாரண மனிதனாக நினைக்க முடிந்தது. ஒரு சாதாரண ஆளாக சாலையில் என்னால் இந்த இரண்டு மாதங்கள் நடக்க முடிந்தது. அப்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியாத இடத்தில் நான் இருந்தது கொஞ்சம் வித்தியாசமான நல்ல உணர்வாக இருந்தது. இந்த இரண்டு மாதத்தில் என் குடும்ப உறுப்பினர்களுடன் பொழுதை மகிழ்ச்சியாக கழித்தேன்.
தற்போது இரண்டு குழந்தைகளுக்கு நான் தந்தையாக இருக்கின்றேன். இது முற்றிலும் வித்தியாசமான பொறுப்பாக எனக்கு இருந்தது. தற்போது இரண்டாவது குழந்தை வந்தாலும் முதல் குழந்தையுடன் நான் பாசமாக இருப்பது நேரத்தை செலவிடுவது போன்ற விஷயங்களை பார்க்கும் போது எனக்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதமாக தான் இதை நான் நினைக்கின்றேன்.
இந்த ஓய்வில் இருந்து திரும்பி வந்தவுடன் இந்த சத்தம் எல்லாம் கேட்கும் போது எனக்கு வித்தியாசமாக இருந்தது. இரண்டு மாதம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்பி இருப்பதால் சத்தம் அதிகமாகி விட்டதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனினும் இரண்டு மாதம் கிரிக்கெட் விளையாடாமல் தற்போது எடுத்தவுடன் நான் ரன்கள் சேர்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார்.