மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி பலம் வாய்ந்த அணியாக காகிதத்தில் இருந்தாலும், களத்தில் அவர்கள் தடுமாறி வருகிறார்கள். நடப்பு சீசனில் விராட் கோலி, டுபிளஸிஸ், கேமரன் கிரீன், தினேஷ் கார்த்திக், ரஜத் பட்டிதார் என பல அதிரடி வீரர்கள் இருந்தும் அந்த அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது ஒன்பதாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது.
இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி 182 என்ற இலக்கை தொட முடியாமல் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய மகிபால் லோம்ரார் மட்டும் 30 ரன்கள் தாண்டினார்.

மற்ற அனைவரும் சொதப்பினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், ஆர் சி பி அணியில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் 7, 8 போட்டிகளில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது கூட தேவை இல்லை. விராட் கோலியால் கூட ஏழு, எட்டு போட்டிகளில் அந்த அணியை வெற்றி பெற வைக்க முடியாது.
இப்போதுள்ள அணிகள் குறைந்தபட்சம் இரண்டு, மூன்று போட்டிகளாவது நாம் எடுக்கும் வீரர்கள் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த இரண்டு போட்டிகளாவது வெற்றி பெற வைத்தால் அதுவே மிகப்பெரிய சாதனையாக தான் நான் நினைக்கின்றேன். எப்போதுமே ஒரு வீரர் தொடர்ந்து ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு முதல் போட்டியில் சதம்,இரண்டாவது போட்டியில் 80 ரன்கள் என தொடர்ந்து ஒரே மாதிரி ரன்கள் சேர்க்க வேண்டும். இதே போல் செயல்பட்டால் குறைந்தபட்சம் அவர்களால் 7, 8 போட்டிகளில் ஆவது வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் இது ஒரு ஆண்டில் வேண்டுமானால் நடக்குமே, தவிர ஐபிஎல் போன்ற ஒரே தொடரில் நிச்சயம் நடக்காது. இந்த 17 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் நான் இதுவரை எந்த ஒரு வீரரும் ஏழு, எட்டு போட்டிகளில் ஒரு அணியை அபாரமாக ஆடி வெற்றி பெற வைத்ததில்லை என்று சேவாக் கூறியுள்ளார். தற்போது ஆர்சிபி அணி வரும் சனிக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.