மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. வெற்றி அடைய வேண்டிய போட்டியில் சரியாக பேட்டிங் செய்யாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இதை அடுத்து முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் மும்பை இந்தியன்ஸ் அணி செய்த பெரிய தவறு ஒன்றை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பத்தினர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை அழைத்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிரடியாக கூறி இருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்களை சேஸிங் செய்தது. அப்போது அந்த அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் அதிரடி பேட்ஸ்மேன்களான ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் நடு வரிசையில் பேட்டிங் இறங்காமல் ஏழு மற்றும் எட்டாம் வரிசையில் தான் பேட்டிங் இறங்கினார்கள். அது குறித்து வீரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து சேவாக் கூறுகையில், "டிம் டேவிட் மற்றும் ஹர்திக் பாண்டியா மிகவும் தாமதமாக பேட்டிங் செய்ய வந்தார்கள். அதனால் போட்டி முடிவு என்ன ஆனது? நிறைய பந்துகள் மீதமிருந்தது. முக்கிய வீரர்கள் விக்கெட்களை இழந்து விட்டார்கள். அப்போது முன்பே வந்து பேட்டிங் செய்யாமல் மிகத் தாமதமாக தான் பேட்டிங் செய்ய வந்தனர். பாண்டியா ஏழாவது பேட்டிங் வரிசையிலும், டேவிட் எட்டாவது பேட்டிங் வரிசையிலும் களமிறங்கினர். அவர்கள் அந்த அளவுக்கு மோசமான வீரர்களா? அவர்கள் வந்தவுடன் விக்கெட்டை இழந்து செல்லும் வீரர்களா? அவர்கள் ஏன் முன்பே பேட்டிங் இறங்கவில்லை" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், "ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது நான்காம் வரிசையில் பேட்டிங் இறங்கினார். அது இப்போது என்ன ஆனது? ஏன் நல்ல வீரர்கள் எல்லாம் பின் வரிசையில் பேட்டிங் செய்கிறார்கள்? இது எனக்கு புரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் இப்போதே 2025 ஐபிஎல் தயாராகி வருகிறது என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தாலும் இப்போதே பேட்டிங் வரிசையில் யார் முன்னே இறங்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் எப்படி எதிர்காலத்தை பற்றி இப்போது சிந்திப்பீர்கள்? உங்களுக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கும் போது அதற்கான முயற்சி செய்யாமல் அடுத்த ஆண்டை பற்றி எப்படி யோசிப்பீர்கள்? உங்கள் பேட்டிங் வரிசையை நீங்கள் சொதப்பி வைத்துள்ளீர்கள். அதனால் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை" என்று சேவாக் கூறி இருக்கிறார்.
மேலும், "இது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. இது குறித்து அணி உரிமையாளர்கள் நிச்சயம் வீரர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல வீரர்களும் தாங்கள் ஏன் வெவ்வேறு இடங்களில் பேட்டிங் செய்தோம் என்பதை விளக்க வேண்டும். இது முற்றிலும் பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், பிற உதவிப் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் ஆகியோரின் தவறுதான். அணியின் உரிமையாளர்கள் அவர்களிடம் கடினமான கேள்விகளை கேட்க வேண்டும்" என சேவாக் விளாசி இருக்கிறார்.