பெங்களூரு: ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்சிபி அணி பயிற்சியாளர் ஆண்டி பிளவரின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் ஆர்சிபி அணி தரப்பில் எந்த வீரர்கள் வாங்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் மிகச்சிறந்த அணியாக இருந்தும் 16 சீசன்களாக ஆர்சிபி அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.

இம்முறை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி தரப்பில் ஹசரங்கா, ஹர்சல் படேல், ஹேசல்வுட், ஃபின் ஆலன், பிரேஸ்வெல், டேவிட் வில்லி, பார்னல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதார் ஜாதவ் உள்ளிட்டோரை விடுவித்தது. அதேபோல் டிரேட் முறையில் மயங்க் டாகர் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரையும் ஒப்பந்தம் செய்தது.
இதனால் ஆர்சிபி அணியின் கையிருப்பில் 23.25 கோடி உள்ளது. இந்த தொகை மூலமாக 3 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 3 உள்ளூர் வீரர்களின் இடங்களை ஆர்சிபி அணி நிர்வாகம் நிரப்ப வேண்டும். ஹசரங்கா மற்றும் ஹேசல்வுட்டை விடுவித்ததன் மூலமாக ஆர்சிபி பவுலிங்கில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது என்றே சொல்லலாம்.
குறிப்பாக ஹசரங்காவை விடுவித்துள்ளதால், ஆர்சிபி அணி தரமான ஸ்பின்னரை வாங்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான், துனித் வெல்லாலகே உள்ளிட்டோரை வாங்குவதற்கு முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹர்சல் படேலுக்கு பதிலாக கார்த்திக் தியாகி, ஷர்துல் தாக்கூர், சேத்தன் சக்காரியா உள்ளிட்டோரை வாங்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஒரு வெளிநாட்டு பவுலரின் தேவை ஆர்சிபி அணிக்கு இருப்பதால் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், மதுஷங்கா உள்ளிட்ட 3 பேரில் ஒருவரை வாங்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆர்சிபி அணியின் கையிருப்பில் ரூ.23.25 கோடி மட்டுமே இருப்பதால், ஒரேயொரு வீரரை மட்டுமே அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.