மும்பை : ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகன் விருதுடன் வீரர்களுக்கு அளிக்கப்படும் பணம் ஒருத்தருக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைத்திருந்ததாக இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகள், ஐபிஎல், டிஎன்பிஎல் வரை எந்த வகையிலான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். விருது மட்டுமல்லாமல் பணமும் பரிசாக அளிக்கப்படும். இந்தியாவில் ஆட்டநாயகன் விருது பெறும் வீரர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையாக அளிக்கப்படும். இதுகுறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ளார்.

அண்மையில் மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். என்சிஏவில் முழு ஃபிட்னஸையும் நிரூபித்துள்ள ஹர்திக் பாண்டியா மும்பையில் நடந்து வரும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மும்பை அணிக்கான விளம்பரப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், என்னை பற்றி என் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், நான் வெளியில் அதிகம் சுற்றும் நபரல்ல. கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் அதிகமாக வெளியில் சென்றதில்லை. பெரும்பாலும் வீட்டிலேயே தான் இருப்பேன். வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ அல்லது நண்பர்களுக்கு ஏதேனும் அவசரம் என்றாலோ மட்டும் தான் வெளியில் வருவேன்.
ஒருமுறை 50 நாட்களுக்கும் மேலாக வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இவ்வளவு ஏன், எனது வீட்டில் உள்ள லிஃப்டை கூட பார்க்கவில்லை. எனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம், ஹோம் தியேட்டர் உள்ளிட்டவை உள்ளது. எனக்கு பிடித்தமானவற்றை வீட்டிலேயே வைத்துள்ளேன். அதேபோல் மீடியாவில் வெளிப்படையாக எந்த கருத்தையும் சொல்ல கூடாது என்று முடிவெடுத்து பல ஆண்டுகளாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் ஆட்டநாயகன் விருது பற்றி ஹர்திக் பாண்டியா பேசுகையில், முதல்முறையாக சர்வதேச அளவில், ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போது ஆட்டநாயகன் விருதுடன் வரும் பணம் அந்த வீரருக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைத்திருந்தேன். ஆனால் அது அணியில் உள்ள வீரர்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் என்பது பின்னர் புரிந்தது. ஏனென்றால் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு தான் என்று தெரிவித்துள்ளார்.