சென்னை : ஆர்சிபி அணியில் கரண் சர்மாவை தவிர்த்து வேறு எந்த நல்ல ஸ்பின்னரையும் வாங்காதது ஏன் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 5 நாட்களில் தொடங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 9வது முறையாக முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் வெற்றிகரமாக சிஎஸ்கே அணி தொடரை தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி 2008ஆம் ஆண்டு முதல் சீசனிலேயே சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதன்பின் சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி சென்னை அணியை ஒருமுறை கூட வென்றதில்லை. 2008 முதல் 2019 வரை 7 முறை ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கியுள்ளன. இதில் ஆர்சிபி அணி ஒரு முறையும், சிஎஸ்கே அணி 6 முறையும் வென்றுள்ளன.
இதனால் 15 ஆண்டு கால வரலாற்றை மாற்ற ஆர்சிபி அணி தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் ஆர்சிபி அணி குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ஆர்சிபி அணியில் உள்ள பிரச்சனை மிகவும் வெளிப்படையாக உள்ளது. பவுலர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, ஸ்பின்னர்கள் எங்கே என்ற கேள்வியே எழுகிறது. ஸ்பின்னர்களை ஏன் வாங்கவில்லை என்பது இப்போது வரை புரியவில்லை. ஐதராபாத் அணியில் இருந்து மயங்க் டாகரை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் ஷாபாஸ் அஹ்மத்தை கொடுத்திருக்கிறார்கள்.
மற்றபடி ஆர்சிபி அணியின் நல்ல ஸ்பின்னர் என்றால் அது கரண் சர்மா மட்டும் தான். ஆனால் அவரையும் சந்தேக கண்களுடனே ஆர்சிபி அணி அணுகி வருகிறது. அவரை அனைத்து மைதானங்களிலும் களமிறக்காமல் இருப்பது ஏன் என்றே புரியவில்லை. இவரை கடந்து உள்ளூர் வீரர்களான ராஜன் குமார், ஹிமான்ஷு சர்மா, ஸ்வப்னில் சிங் ஆகியோர் மட்டுமே உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இவர்களால் எப்படி செயல்பட முடியும் என்று தெரியவில்லை.
அதேபோல் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் ஃபார்மில் இல்லை. எஸ்ஏ20 லீக் தொடரில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது நல்ல விடுப்பில் இருந்து மீண்டும் கிரிக்கெட் களம் திரும்பி இருக்கிறார். அவர் மட்டும் தொடக்கம் முதலே ஃபார்மில் இல்லையென்றால், ஆர்சிபி அணியின் ஆட்டம் திண்டாட்டம் தான் என்று கூறியுள்ளார்.