ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று மாபெரும் சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான அபிஷேக் ஷர்மா விளங்கினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் ஓவரில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அபிஷேக் ஷர்மா என்ற இடதுகை பேட்ஸ்மேன் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர்களுக்கு சாவு பயத்தை காட்டி இருப்பார். சிக்ஸர் பவுண்டரி என்று பறக்கவிட்ட அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதம் கடந்த மொத்தமாக 23 பந்துகளை மட்டுமே எதிர்கொண் அவர் 63 ரன்கள் விளாசினார்.

இதில் ஏழு சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 273 என்ற அபாயகரமான அளவில் இருந்தது. இந்த இன்னிங்ஸை பார்த்தவுடன் பல ரசிகர்களும் யார் இந்த அபிஷேக் ஷர்மா என்று தேடி வருகிறார்கள். அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் விளையாடுவது புதிதல்ல. அவர் 2018 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
முதல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடுகிறவர் அறிமுக போட்டியிலே 19 பந்துகளை எதிர் கொண்டு 46 ரன்கள் விளாசினார். அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடருக்கு முன்பே தன்னுடைய அதிரடி ஆட்டம் மற்றும் சுழற் பந்து வீச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். 2016 ஆம் ஆண்டு இந்திய அண்டர் 19 அணியை கேப்டனாக வழி நடத்தி ஆசியக் கோப்பையை கைப்பற்றினார்.
அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்த அபிஷேக் ஷர்மா, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு காரணமாகவும் இருந்தார். யுவராஜ் சிங் போலவே பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்திருக்கும் இவர் இடது கை பேட்ஸ்மனாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
இருப்பினும் அபிஷேக் ஷர்மா மீது ரசிகர்களின் வெளிச்சம் பட்டது. அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வந்த பிறகுதான் இவருடைய திறமையை அறிந்து கொண்ட சன்ரைசர்ஸ் அணி அவரை தொடக்க வீரராக முன்னிறுத்தியது. அதிலிருந்து அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். இளம் வீரர் என்பதால் அதிரடியாக ஆட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பெரிய ரன்களை எடுக்க தவறி விட்டார். இந்த தவறை மட்டும் அவர் சரி செய்து கொண்டால் நிச்சயம் இந்திய அணியில் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.