சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவோன் கான்வேக்கு பதிலாக இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வேக பந்துவீச்சாளரான ரிச்சர்ட் கிளீசென் மாற்று வீரராக அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய பிரச்சனையாக வேகப்பந்து வீச்சு இருந்தது.
வெளிநாட்டு வேதப்பந்துவீச்சாளர்கள் மொத்தம் இரண்டு பேர் தான் சிஎஸ்கே அணியில் இருந்தார்கள். முஸ்தபிசூர் ரஹ்மானும், பதிரானாவும் நல்ல முறையில் செயல்பட்டார்கள். எனினும் ரஹ்மான் தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேசம் செல்கிறார்.

மேலும் t20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் டிவோன் கான்வே தற்போது காயத்தால் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ரிச்சர்ட் கிளீசன் என்ற இங்கிலாந்து வீரரை சிஎஸ்கே தேர்வு செய்தது.
36 வயதான ரிச்சர்ட் கிளீசன் ஐபிஎல் தொடரில் 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் பங்கேற்றார். ஆனால் அவருக்கு வயதாகி விட்டது என்ற ஒரே காரணத்தினால் எந்த அணியும் சேர்க்கவில்லை. இந்த நிலையில் வேறு வழி இல்லாததால் தற்போது சிஎஸ்கே ரிச்சர்ட் கிளீசனை தேர்வு செய்துள்ளது. ரிச்சர்ட் கிளீசன் யாக்கர்கள் வீசுவதில் வல்லவராக திகழ்கிறார்.
அவருடைய பவுலிங் முறையை பார்த்த ரசிகர்கள் அடப்பாவிங்களா! இப்படிப்பட்ட வீரரைய்யா இதுவரை எடுக்காமல் அனைத்து அணிகளும் இருந்தது என்று யோசித்து வருகிறார்கள். மேலும் சிஎஸ்கே அணி சூப்பரான ஒரு பவுலரை தற்போது தேர்வு செய்திருப்பதாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக ரிச்சர்ட் கிளீசன் வீசும் யாக்கர்களை பேட்ஸ்மேன்கள் எதிர் கொள்ள முடியாமல் தடுமாறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் கிளீசென் 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு ஸ்டெம்பை நோக்கி வீசுகிறார். அந்த பந்தை தொட கூட முடியாமல் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஆட்டம் இழக்கின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் பதிரானா அபாரமாக பந்து வீசி வரும் நிலையில், ரிச்சர்ட் கிளீசனும் சிஎஸ்கே அணியில் இணைந்தால் நிச்சயம் அந்த அணியின் பந்துவீச்சு பலத்தை பல மடங்கு உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.