லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் என்றால் சாதனைகளுக்கு மட்டும் இல்லாமல் சர்ச்சைகளுக்கும் பல இடங்கள் இருக்கின்றது. விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் பல அணிகளில் உரிமையாளர்களும் சிக்கியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நிர்வாகியான குருநாத் மெய்யப்பனை தொடங்கி பல பேர் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கால்பந்து உலகில் ஒரு அணி சரியாக விளையாடவில்லை என்றால் அந்த அணியின் மேலாளர் அல்லது பயிற்சியாளர் தான் வீரர்களை திட்டுவார்கள். இது எல்லா விளையாட்டிலும் நடக்கின்ற ஒரு விஷயம் தான். ஆனால் அணியின் உரிமையாளர்கள் இது குறித்து தலையிடவே மாட்டார்கள்.

அப்படி ஏதேனும் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் மூடிய அறைக்குள் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவிப்பார்கள். ஆனால் நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வியை தழுவிய நிலையில் அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுலை கடுமையாக திட்டி அனைவர் முன்பும் காரசாரமாக விவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு அணியின் உரிமையாளராக எப்படி மரியாதையாக வீரர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சஞ்சீவ் கோயங்காவுக்கு தெரியவில்லை என்று ரசிகர்கள் சாடி இருக்கின்றனர். இந்த நிலையில் இவ்வளவு திமிராக நடந்து கொண்ட சஞ்சீவ் கோயங்கா யார் என்ன என்று தற்போது பார்க்கலாம். ஆர்பிஎஸ் ஜி குரூப் நிறுவனத்தின் தலைவராக சஞ்சீவ் கோயங்கா இருக்கின்றார்.
இவர் Forbes நிறுவனத்தின் செல்வந்தர்கள் பட்டியலில் 949 வது இடத்தில் இருக்கிறார். கோயங்காவின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் 84 ஆவது பணக்காரர் என்ற பெருமையை சஞ்சீவ் கோயங்கா பெற்றிருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என்ற அணியை வாங்கி 2016 மற்றும் 17 ஆம் ஆண்டு நடத்தினார். அப்போது இவருடைய சகோதரரான ஹார்ஸ் கோயங்காவுக்கும் தோனிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இதில் தோனியை தேவையே இல்லாமல் வெளிப்படையாக திட்டி சர்ச்சையிலும் ஹர்ஸ் கோயங்கா சிக்கினார்.
இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு மீண்டும் புனேவை மையமாகக் கொண்டு புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என்ற ஒரு அணியை கோயங்கா வாங்கி இருக்கிறார். கொல்கத்தாவை சேர்ந்த கோயங்கா பி.காம் பட்டதாரி ஆவார். அங்குள்ள சேவியர் கல்லூரியில் படித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் வழங்கப்படும் உயரிய விருதான பங்கா விபூஷன் என்ற விருதை 2015 ஆம் ஆண்டு கோயங்கா பெற்றிருக்கிறார்.
கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்திலும் சில அணிகளை வாங்கி இருக்கிறார். கொல்கத்தாவை மையமாகக் கொண்ட மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட் அணியை சஞ்சீவ் கோயங்கா தான் வாங்கி இருக்கிறார். இப்படி தொழில்துறையில் சிறந்து விளங்கினாலும் கே.எல். ராகுல் இடம் அவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களின் விமர்சனத்தை பெற்று இருக்கிறது.