மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஸ்டார் பவுலரான தீபக் சாகர் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்து போட்டியிலிருந்து விலகினார்.
இதை போன்று முஸ்தஃபீசுர் ரகுமான் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்று விட்டார். மேலும் பதிரானா,தீக்சனா போன்ற வீரர்கள் அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக சென்றிருக்கிறார்கள்.

மேலும் சிஎஸ்கே அணியில் நன்றாக பந்து வீசி கொண்டு இருந்த துஷாந்த் தேஷ் பாண்டேவுக்கும் காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணி யாரை களம் இறக்கப் போகிறது என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிஎஸ்கே அணியில் யார் காயமடைந்தாலும் அவர்களுக்கு மாற்றாக வீரர்கள் இருக்கும் வகையில் அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் எந்த வீரர் சென்றாலும் அதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. தற்போது தீபக்சாகர் விலகி இருப்பது சிஎஸ்கே அணியில் உள்ள ஒரு இளம் நட்சத்திர வீரருக்கு அணியில் விளையாட வாய்ப்பை கொடுத்திருக்கிறது. சிஎஸ்கே அணியில் உள்ள ராஜவர்தன் ஹங்கர்கேகர் என்ற ஆல்ரவுண்டர் நீண்ட காலமாக ஐபிஎஸ் போட்டியில் விளையாட காத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் 2023 ஆம் ஆண்டு சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ராஜவர்த்தன் ஹங்கர்கேகர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக விளையாடி வருகிறார். இவரை குட்டி ஹர்திக் பாண்டியா என்றுதான் ரசிகர்கள் அழைப்பார்கள்.
திறமை வாய்ந்த வீரராக இவர் இருந்தாலும் சிஎஸ்கே அணி ராஜவர்த்தன் ஹங்கர்கேகர் தொடர்ந்து வாய்ப்பு வழங்காமல் இழுத்து அடித்து வருகிறது. இதனால் ராஜவர்த்தன் ஹங்கர்கேகர் இனிவரும் போட்டிகளில் பயன்படுத்தி அவருக்கு ஆதரவு வழங்கினால் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் நிச்சயமாக சிஎஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் கிடைப்பார்.