மும்பை : ஐபிஎல் தொடரில் சொதப்பினால் இஷான் கிஷனின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வரும் நிலை உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நீக்கப்பட்டனர். இதற்கு இருவரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டும், இருவரும் விளையாடாமல் தவிர்த்தனர். குறிப்பாக இஷான் கிஷன் ரஞ்சி சீசனை மொத்தமாக புறக்கணித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இதன் மூலம் முழு உடற்தகுதியுடன் இருந்தும் இஷான் கிஷன் ரஞ்சி சீசனை புறக்கணித்ததால், அவர் இந்திய அணி நிர்வாகத்தின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாட மறுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணிக்காக அறிமுகமான துருவ் ஜுரெல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி நிர்வாகம் அவருக்கு விரைவில் சி கிரேடு ஒப்பந்தத்தை வழங்கவுள்ளது. இதனால் இஷான் கிஷனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே ரஞ்சி சீசனில் விளையாடாததால், இந்திய டெஸ்ட் அணியில் இனி இஷான் கிஷன் இடம்பெற வாய்ப்பே கிடையாது.
அதேபோல் இந்த ஆண்டில் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தான் இஷான் கிஷன் இலக்காக வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான பேக் அப் விக்கெட் கீப்பர் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இருவரின் ஆட்டத்தை பார்த்த பின்னரே தேர்வு குழு முடிவு எடுக்கும். இதனால் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் சொதப்பினால், டி20 கிரிக்கெட் அணியில் இடம்கிடைக்க வாய்ப்பில்லை. மும்பை போன்ற ஃபிளாட் பிட்ச்களில் இஷான் கிஷனால் சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும், லக்னோ, சேப்பாக்கம், டெல்லி போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச்களிலும் இஷான் கிஷன் ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.