மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்றால் அது சாகல்தான். இப்படி சாகல் இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்தபோது தற்போது அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் பிசிசிஐ வழங்கும் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து சாகலின் பெயரும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறது.
இதனால் சாகல் தன்னுடைய திறமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறார். இதற்காக அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட ஆயத்தமாகி வருகிறார்.

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற டி ஒய் பாட்டில் டி20 கோப்பையில் வருமானவரித்துறை அணி சார்பாக களமிறங்கிய சாகல் அபார பந்துவீச்சை வீசினார். கனரா வங்கிக்கு எதிரான ஆட்டத்தில் சாகலின் பந்துவீச்சால் வருமானவரித்துறை அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற கனரா வங்கி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய வருமானவரித்துறை அணி இரண்டாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் விஷாந்த் 28 பந்துகளில் 61 ரன்களும்,சேல்டன் ஜாக்சன் 32 ரன்களும் மகிபால் லோம்ரார் 49 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் சுமித் குமார் 18 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்களும் நான்கு பௌண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் வருமானவரித்துறை அணி 244 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து கனரா வங்கி அணி பேட்டிங் செய்தது. அப்போது சாகலின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கனரா வங்கி அணி 16 ஓவர் முடிவில் 109 ரன்கள் சுரண்டது.
அபாரமாக பந்துவீச்சை சாகல் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை அடுத்து மற்றொரு ஆட்டத்தில் ஜெயின் அணியை ரிலையன்ஸ் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் ரிலையன்ஸ் அணி சார்பாக களமிறங்கிய திலக் வர்மா 40 ரன்கள் எடுத்தார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் சாவ்லா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 41 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.