மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷி என்ற வீரரை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் வைபவ் சிறுவன் என்பதால் அவர் ஐபிஎல் போன்ற கிரிக்கெட்டு தொடர்களில் பங்கேற்க அனுமதி இருக்கிறதா?
அவருக்கு உண்மையிலேயே 13 வயது தானா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.அது குறித்து தற்போது பார்க்கலாம். ஐசிசி விதிகளின்படி 15 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாது. அப்படி கண்டிப்பாக விளையாட வேண்டும் என்றால் அதற்காக ஸ்பெஷல் பர்மிஷன் வாங்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்திருப்பதால் வைபவ் சூர்யவன்ஷிக்கும் அவருடைய செயல்பாடு பொறுத்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்குள் இந்திய அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் சூரியவன்ஷி மைனர் என்பதால் அவருக்கு வழங்கப்படும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் சம்பளம் நேரடியாக அவருடைய தாய், தந்தையின் வங்கி கணக்குக்கு தான் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.
இதேபோன்று ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் விளையாட வேண்டுமென்றால் அதற்கு என ஒரு விதியை பிசிசிஐ வகுத்திருக்கிறது. அதன்படி அண்டர் 19 அல்லது முதல் தர கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் ஒரு வீரர் விளையாடினால் மட்டுமே அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். ஆனால் 13 வயது வீரரான வைபவ் இந்த தகுதி எல்லாம் ஏற்கனவே பெற்றுவிட்டார்.
அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் அவர் சதம் அடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பீகார் அணிக்காக விளையாடுகிறார். இதனால்தான் வைபவ் ஐபிஎல் தொடரில் ஏலத்தில் பங்கு பெற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கூட அவர் சையது முஸ்தாக் அலி தொடரில் 6 பந்துகளில் 13 ரன்கள் அடித்திருக்கிறார்.இந்த நிலையில் வைபவ் ஐபிஎல் தொடருக்கு தேர்வு ஆனாலும் அவரை முதல் சீசனிலே களத்துக்குள் ராஜஸ்தான் அணி கொண்டு வராது என்பது குறிப்பிடத்தக்கது.