லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அப்துல் சமத், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை ஆடினார். அவரது அதிரடியால் 160 ரன்கள் எட்டுமா? என்ற நிலையிலிருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 171 ரன்கள் எடுத்தது.
அப்துல் சமத் இந்த போட்டியில் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 16 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆயுஷ் பதோனி ஒருபுறம் ரன் சேர்த்து வந்தாலும் அவரால் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியவில்லை.

அப்போது ஏழாம் வரிசையில் இறங்கிய அப்துல் சமத் மிரட்டலான ஆட்டத்தை ஆடினார். அனைத்து பந்துகளையும் பவுண்டரி அடிக்கும் நிலையில், பந்தை அடிக்கும் இயந்திரத்தை போல அவர் க்ரீஸில் நின்றார். அவர் சந்தித்த 12 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.
மேலும் முடிந்தவரை எந்த பந்தையும் வீணாக்காமல் சிங்கிள் ரன்களையும் ஓடினார். அவர் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 225 என்பதாக இருந்தது. இந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் அவரது ஸ்ட்ரைக் ரேட்தான் மிகவும் அதிகம்.
நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 44 ரன்கள், ஆயுஷ் பதோனி 33 பந்துகளில் 41 ரன்களும் எடுத்திருந்தனர். ஐடன் மார்கிரம் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார். அவர்கள் மூவருக்கும் அடுத்த அதிக ரன்கள் சேர்த்த அப்துல் சமத், அதிக ஸ்ட்ரைக் ரேட்டிலும் அதை சேர்த்திருக்கிறார்.
இதற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் இதே போன்ற அதிரடி ஆட்டத்தை ஆடி இருந்தார். அந்தப் போட்டியில் அவர் 8 பந்துகளில் 22 ரன்களை சேர்த்து மிரட்டி இருந்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 275 என்பதாக இருந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அடித்தால் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் தான் பந்தை அடிப்பேன் என உறுதியாக அடித்து ஆடி இருக்கிறார் அப்துல் சமத்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய போது அப்துல் சமத் சில போட்டிகளில் அதிரடியாக விளையாடுவார். ஆனால், இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டித்தான் சேர்த்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ஷ்தீப் சிங் 43 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.