ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி உலகில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி வைத்திருக்கிறார்.
சாதாரண தள்ளுவண்டி தள்ளுபவர்களில் இருந்து கூகுள் சிஇஓ வரை அனைவரும் வைபவ் சூரியவன்சி பற்றி தான் பேசி வருகிறார்கள். அதுவும் குறிப்பாக லக்னோ அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.

20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் அடித்தார். இதில் மூன்று சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் கேரியரில் முதல் பந்திலே சிக்ஸர் அடித்த பத்தாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதிலேயே அறிமுகமான வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
இந்த சூழலில் வைபவ் சூர்யவன்சியை பாராட்டி முன்னாள் சிஎஸ்கே வீரரும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரருமான சாம் பில்லிங்க்ஸ் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இதை கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை. 14 வயது தான் ஆகிறதா முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார்.
அவர் பேட்டை சுழற்றும் முறையை பாருங்கள். பார்ப்பதற்கு அப்படியே யுவராஜ் சிங் தன்னுடைய உச்சகட்ட பார்மில் இருந்து விளையாடுவது போல் இருக்கிறது. வாவ் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதேபோன்று பலரும் வைபவ் சூரியவம்சியை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் அணிக்கு திரும்பி விட்டார். வைபவ் சூரியவம்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் நித்திஷ் ரானாவை நீக்கிவிட்டு சூரியவம்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழலில் ராஜஸ்தான் அணி தள்ளப்பட்டு இருக்கிறது.வைபவ் சூர்யவம்சி 14 வயது தான் ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.