ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பல அதிசய சம்பவங்கள் களத்தில் நிகழ்ந்திருக்கிறது அதில் ஒட்டுமொத்த உலகமே தற்போது 14 வயது வீரரான வைபவ் சூரியவம்சியை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றது. ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற போது சூரியவம்சிக்கு வயது 13 தான் ஆனது. அவரின் அடிப்படை விலை 30 லட்சம் ஆக தான் இருந்தது.
ஆனால் பல அணிகளும் அவருக்காக போட்டி போட்டது. இதனால் அவருடைய விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து. ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது. இந்த நிலையில் 14 வயதிலேயே பயிற்சி முகாமில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் அணி அவருக்கு முதல் முறையாக இந்த தொடரில் வாய்ப்பு வழங்கியது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலே குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். தன்னுடைய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த வைபவ் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அது மட்டுமில்லாமல் கொஞ்சம் கூட பயமே இன்றி சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களின் பந்துவீச்சை சிக்சர்,பவுண்டரியாக அவர் விரட்டினார்.
மறுபுறம் அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் நின்றாலும் அவருக்கே சவால்விடும் அளவுக்கு வைபவ் அதிரடி காட்டினார். வெறும் இருபதே பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 170 என்ற அளவில் அபாயகரமாக இருந்தது. இந்த சூழலில் தாம் ஒரு சிறுவன் தான் என்பதை வைபவ் நிரூபித்து விட்டார். ஆட்டம் இழந்தவுடன் வைபவ் திடீரென்று அழத் தொடங்கி விட்டார்.
14 வயதில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு தம்மால் அரை சதம் அடிக்க முடியவில்லை என வைபவ் அழுது கொண்டே பெவிலியன் நோக்கி சென்றார். இது குறித்து குறிப்பிட்டுள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் முரளி கார்த்திக், 14 வயதில் பெரிய சாதனையை தாங்கள் படைத்திருக்கிறீர்கள். நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். அழத் தேவையில்லை.அதுவும் உங்களைவிட வயது மூப்பான வீரர்களுடன் நீங்கள் விளையாடியிருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.