ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயது சூரியவன்ஷி அறிமுகமானார். இதன் மூலம் இளம் வயதில் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் முதல் பந்திலே சிக்ஸர் அடித்த வைபவ் மொத்தமாக 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார்.
இதில் இரண்டு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 85 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் வைபவ், இளம் வயதாக இருந்தாலும் பார்ப்பதற்கு கொஞ்சம் பருமன் ஆகவும், எப்படி இவ்வளவு பலத்துடன் இருக்கிறார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கான விடையை தற்போது வைபவ் சூரியவன்ஷியின் பயிற்சியாளர் ஆன மணிஷ் ஒஜா கூறியிருக்கிறார். இது குறித்து பேசி உள்ள அவர்,வைபவ்க்கு சிக்கன் மட்டன் என்றால் மிகவும் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் அவர் ஒரு சிறுவன் என்பதால் பீட்சா சாப்பிட அதிகம் விரும்புவார். நீங்கள் வைபவ்க்கு எவ்வளவு மட்டன் கொடுத்தாலும் அப்படியே அதனை காலி செய்து விடுவார்.
இதனால் தான் ஒரு பயிற்சியாளராக இனி நீ மட்டனே சாப்பிடக்கூடாது என்று நான் கூறி விட்டேன். இதேபோன்று பீசாவும் அவருடைய உணவுப் பழக்கத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. அதிக அளவு மட்டன் சாப்பிடுவதால் தான் அவர் கொஞ்சம் குண்டாக இருக்கின்றார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை மேல் நோக்கி செல்ல இன்னும் நிறைய தூரம் அவர் பயணிக்க வேண்டும்.
அவர் எப்படி இன்னிங்ஸை ஆரம்பித்தார் என்று நாம் அனைவருமே பார்த்தோம். நான் உங்களுக்கு ஒரு சத்தியம் செய்கின்றேன். இனிவரும் போட்டிகளில் அவர் இன்னும் அதிக ஸ்கோர் அடிப்பார். வைபவ் சூர்யவன்ஷி பயமே இல்லாத ஒரு பேட்ஸ்மேன் அவருக்கு லாரா என்றால் மிகவும் பிடிக்கும்.
அவருடைய பேட்டிங் ஸ்டைலை பார்த்தீர்கள் என்றால் யுவராஜ் சிங்கையும் லாராவையும் கலந்த மாதிரி இருக்கும். யுவராஜ் போல் ஆக்ரோஷமாக விளையாட கூடியவர் என்று பயிற்சியாளர் ஒஜா கூறியுள்ளார். 14 வயது வீரராக வைபவ் சூர்யவன்ஷி இருந்தாலும் அவருடைய உடல் வலு பயங்கரமாக இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், அதற்கு அவர் மட்டன் சாப்பிட்டது தான் காரணம் என்று பயிற்சியாளர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.