ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இன்று போட்டியில் விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதில் ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சிக்கு இம்பாக்ட் வீரராக வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிஷப் பண்ட், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கின்றோம். ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது.

இதனால் முதலில் பேட்டிங் செய்து எங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள விரும்புகிறோம். இதேபோன்று தற்போது பனிப்பொழிவும் பெரிய அளவில் இல்லை. கடந்த போட்டியில் நாங்கள் தோல்வியில் தழுவினாலும் சில நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது.
நாங்கள் சின்ன சின்ன விஷயங்களில் தான் தவறு செய்கின்றோம். அதில் முன்னேற்றம் அடைய முயற்சி செய்கின்றோம். போட்டியை முன்னோக்கிக் கொண்டு செல்ல நாங்கள் முயற்சி செய்கின்றோம். பார்ம்க்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் என்னுடைய பேட்டிங் குறித்து எப்போதுமே கவலைப்பட்டது கிடையாது.
ஏனென்றால் பெரிய ஸ்கோர் விரைவில் அடிக்க முடியும் என்று தெரியும். சில சமயம் ரன்கள் எடுக்க நேரம் எடுத்துக் கொள்ளப்படலாம். கடந்த போட்டியில் அதுதான் நடந்தது. இன்றைய ஆட்டத்தில் ஆகாஷ் தீப் பதில் பிரின்ஸ் யாதவ் விளையாடுகின்றார் என்று பண்ட் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய ரியான் பராக் நாங்கள் முதலில் பந்து வீச தான் முடிவெடுத்து இருந்தோம். எங்கள் அணியில் இன்று 14 வயது வீரரான வைபவ் விளையாடப் போகிறார். இந்த சீசன் எங்களுக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டது உண்மைதான். எனினும் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி பெற முயற்சி செய்வோம்.ஜெய்ப்பூரில் விளையாடுவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த ஆடுகளும் எவ்வாறு செயல்படுகிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடுவோம் என்று நம்புகிறோம் என்று கூறினார். 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இன்று இம்பேக்ட் வீரராக களமிறங்க போகிறார். இதுபோன்று சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் ரியான் பராக் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வீசும்போது பண்ட் எதும் வாய் பேசாமல் நின்று விட்டார். இதனால் இரண்டாவது முறையாக டாஸ் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.