லண்டன்: இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நாட்டிங்ஹம்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 105 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். அதிலும் சிக்சர் அடித்து சாய் சுதர்சன் சதத்தை எட்டிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் போது கவனம் ஈர்த்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நாளுக்கு நாள் பேட்டிங் திறமையை மேம்படுத்தி கொண்டே வருகிறார். 2023ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்காக எதிராக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன், கடந்த சீசனில் மட்டும் 527 ரன்களை விளாசி தள்ளினார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் விரைவாக ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது சாய் சுதர்சன் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். இருந்தாலும் சாய் சுதர்சனுக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தொடர்ச்சியாக தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவாக இருந்து வருகிறார். 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவடைந்த பின் சில மாதங்கள் ஓய்வில் இருந்த சாய் சுதர்சனுக்கு, கவுண்டி ஒப்பந்தம் கிடைக்க அஸ்வின் காரணமாக அமைந்தார். அஸ்வின் பரிந்துரையின் பேரில் சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட, அங்கும் சென்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு போட்டிகள் இல்லாத போது சாய் சுதர்சன் கவுண்டி கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து பறந்துவிடுவார். அந்த வகையில் டிஎன்பிஎல் தொடர் முடிவடைந்த பின் வழக்கம் போல் இம்முறையும் சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக விளையாட தொடங்கினார். இந்த நிலையில் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி களமிறங்கியது.
முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய சாய் சுதர்சன் 178 பந்துகளில் ஒரு சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 105 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அதிலும் சிக்சர் அடித்து சாய் சுதர்சன் சதத்தை எட்டியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக முதல் இன்னிங்ஸில் சர்ரே அணி 525 ரன்களை குவித்திருக்கிறது. அந்த அணியின் ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி 161 ரன்களை விளாசினார்.
இந்த போட்டியுடன் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்தியாவுக்கு திரும்பவுள்ளார். துலீப் டிராபியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான டீம் சி-யில் விளையாடவுள்ளார். இந்த தொடரிலும் சாய் சுதர்சன் திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணிக்கும் நிச்சயம் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.