சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காகிதத்தில் பலமான அணியாகவே விளங்குகிறது. சரியான வீரர்களை சரியான நேரத்தில் கட்டமைத்தாலே ஐபிஎல் போன்ற தொடர்களில் பாதி வெற்றி உறுதியாகி விடும்.
எனினும் காகிதத்தில் சிறப்பாக இருக்கும் அணி, களத்தில் கோட்டை விட்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக 2008ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணியில் அப்ரிடி, கில்கிறிஸ்ட் சைமன்ட்ஸ் போன்ற பல அதிரடி வீரர்கள் இருந்தும் அந்த அணி மண்ணைக் கவ்வியது.

இதற்கு காரணம் அணியில இருந்த முக்கிய வீரர்கள் பலர் பார்மில் இல்லாததுதான். அதேபோல் சிஎஸ்கே அணியும் தற்போது பலமான வீரர்களை தேர்வு செய்தாலும், சில வீரர்கள் ஃபார்மில் இல்லை. எனினும் இந்த வீரர்கள் எல்லாம் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு திரும்பலாம். அப்படி திரும்பினால் சிஎஸ்கே அணி மிகவும் பலமாக மாறிவிடும்.
அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே கேப்டன் ருதுராஜ் தான். ருதுராஜ் நல்ல தொடக்கத்தை கொடுத்தால் அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆனால் ருதுராஜ் கடந்த சில காலமாக சரியாக விளையாடவில்லை.
அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கூட ருதுராஜ் 7,5,13,12 ,8 ஆகிய ரன்களை தான் அடித்திருந்தார். எனினும் பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ருதுராஜ் 83 பந்துகளில் 89 ரன்கள் அடித்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
இதனால் ருதுராஜ் மீண்டும் பழைய உத்வேகத்தை பெறுவாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ராகுல் திருப்பாதி. சிஎஸ்கே அணியின் புதிய வீரராக அணிக்கு வந்துள்ள ராகுல் திருப்பாதி ரஹானேவின் இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ராகுல் திருப்பாதி விளையாடிய கடைசி பத்து போட்டிகளில் ஒரே ஒரு அரை சதம் மட்டும் தான் அவர் அடித்திருந்தார். எஞ்சிய ஒன்பது இன்னிங்ஸ்களிலும் அவர் 30 ரன்கள் கூட தாண்டவில்லை. கடைசி மூன்று இன்னிங்ஸில் ராகுல் திருப்பதி மொத்தமாகவே 44 ரன்கள் தான் எடுத்திருந்தார்.இதனால் ராகுல் திருப்பாதியின் ஃபார்ம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு கவலையை தருகிறது.
இதேபோன்று சிஎஸ்கே அணியில் மிகவும் முக்கியமான வீரராக கருதப்படுபவர் தீபக் ஹூடா. ஆல் ரவுண்டர் ஆன இவர், சிஎஸ்கேவின் பலத்தை கூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபக் ஹூடா, கடைசி 10 இன்னிங்ஸில் ஒரே ஒரு முறை தான் 50 ரன்கள் மேல் அடித்திருக்கிறார்.
குறிப்பாக தீபக் ஹூடா கடைசி 10 போட்டிகளில் இரண்டு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். மேலும் பந்துவீச்சிலும் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் தீபக் ஹூடாவின் இந்த ஃபார்ம் சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.