மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ரசிகர்களிடையே தீவிர விவாதம் நடந்து வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தை பிசிசிஐ நடத்தி முடித்துள்ளது. அந்த கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளை பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்த முடிவு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருக்கிறார். பிசிசிஐ தரப்பில் மெகா ஏலத்திற்கு முன்பாக 4 வீரர்களை தக்க வைக்கவும், 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கவும் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மெகா ஏலத்திற்கு முன்பாக 3 அணிகள் தங்களின் கேப்டன்களை விடுவிக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் முதலில் இருப்பது ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தான். 40 வயதை எட்டியுள்ள டூ பிளசிஸ் இன்னும் 3 ஆண்டுகளுக்கு முழுமையாக கிரிக்கெட் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான். அவர் கேப்டனாக இருந்த 3 சீசன்களில் 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறி இருந்தாலும், எதிர்காலத்தை மனதில் வைத்து டூ பிளசிஸை விடுவிக்க ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் ஷிகர் தவான் விடுவிக்கப்பட அதிகளவிலான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த சீசனில் தோள்பட்டை காயம் காரணமாக சில போட்டிகளில் மட்டும் விளையாடிய அவர், அதற்கு முந்தைய சீசனிலும் முழுமையாக பங்கேற்கவில்லை. 38 வயதை எட்டியுள்ள நிலையில், அவர் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்றே பார்க்கப்படுகிறது.
இதனால் பஞ்சாப் அணி புதிய கேப்டனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் ஷிகர் தவானை விடுவித்துவிட்டு மீண்டும் ஏலத்தில் வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஷிகர் தவானை ஏலத்தில் விட்டால் கூட மீண்டும் ரூ.5 கோடியில் வாங்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் லக்னோ அணியின் கேப்டனாக உள்ள கேஎல் ராகுலும் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சீசனிலேயே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஏற்கனவே தோனியை பொறுப்பில் இருந்து சஞ்சீவ் கொயங்கா நீக்கியிருப்பதால், கேஎல் ராகுலை விடுவித்துவிட்டு புதிய அணியை கட்டமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.