மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான சீசனில் எந்த வீரர்கள் விளையாட போகிறார்கள்? யார் மெகா ஏலத்தில் பங்கேற்க போகிறார்கள் என்ற தகவல் வரும் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
அதிகபட்சமாக மெகா ஏலத்திற்கு முன்பு ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இதில் ஆறு பேரும் வெளிநாட்டு வீரர்களாக கூட இருக்கலாம் என்று பிசிசிஐ கூறி இருக்கிறது.இந்த நிலையில் எத்தனை கோடி கொடுத்தாலும் சில அணிகள் தங்களது வெளிநாட்டு வீரர்களை விடுவிக்கப் போவதில்லை என்ற உறுதியில் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் ஜாஸ் பட்லர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரராக பட்லர் இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 3582 ரன்கள் அடித்திருக்கும் பட்லரின் ஸ்ட்ரைக் ரேட் 147 என்ற அளவில் இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு ஜாஸ் பட்லர் 863 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அதிரடி காட்டுவதால் பட்லரை எவ்வளவு கோடி கொடுத்தாலும் ராஜஸ்தான் அணி வெளியேற்றுப் போவது கிடையாது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நிக்கோலஸ் பூரான்.
லக்னோ அணிக்காக விளையாடி வரும் பூரான் கடந்த சீசனில் 499 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 178 என்ற அளவில் இருக்கிறது. சிறந்த t20 பேட்ஸ்மனாக விளங்கும் பூரான் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடியவர். இதனால் அவரை லக்னோ அணி அதிக விலை கொடுத்து தக்க வைக்க முடிவெடுத்து இருக்கிறது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட், கடந்த சீசனில் டிராவிஸ் ஹெட் 567 ரன்கள் குவித்து 191 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் வீரராக ட்ராவிஸ் ஹெட் இருப்பதால் அவரை சன்ரைசர்ஸ் அணி விடுவிக்காது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ரஷித் கான். குஜராத் அணிக்காக கடந்த மூன்று சீசன்கள் விளையாடி வரும் ரஷித் கான் மொத்தம் குஜராத் அணிக்கு 55 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 149 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கும் ரஷித் கான், பேட்டிகிலும் அதிரடியாக ஆடக்கூடியவர். இதனால் ரஷித் கானை விடுவிக்க குஜராத் அணி விருப்பம் காட்டவில்லை. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக விளையாடி வரும் பதிரானா, கடந்த சீசனில் காயம் காரணமாக வெறும் ஆறு போட்டியில் தான் விளையாடி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி பதிராணாவை எக்காரணத்தைக் கொண்டும் ஏலத்தில் விடுவிக்காது.