முல்லான்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான ஏபி டி வில்லியர்ஸ், தான் ஒரு விஷயத்தைச் சொல்லக்கூடாது என விராட் கோலி அனுமதி மறுத்திருப்பதாகக் கூறி இருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் இன்று வரை அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக உள்ளது. அந்த அணி ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் "ஈ சாலா கப் நம்தே" என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார்கள். அதாவது, கன்னட மொழியில் "இந்த ஆண்டு கோப்பை எங்களுக்குத்தான்" என்ற பொருளில் இந்த வாசகம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களும் இதைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அந்த அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. அதிகபட்சமாக மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டி வரை மட்டுமே அந்த அணி முன்னேறி இருந்தது.
இந்த நிலையில், நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் சமூக வலைத்தளங்களில் எந்த இடத்திலும் "ஈ சாலா கப் நம்தே" என்ற வாசகம் இடம் பெறவில்லை.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை நெருங்கி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டு நிச்சயம் கோப்பையை வெல்லும் எனச் சொல்ல விரும்பினாலும், அதைச் சொல்ல வேண்டாம் என விராட் கோலி தனக்குக் கூறி இருப்பதாக ஏபி டி வில்லியர்ஸ் சொல்லி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஆர்.சி.பி.யின் நேரம் வந்துவிட்டது. ஆர்.சி.பி இத்தனை தூரம் முன்னேறிவிட்டது. ஆனால் நான் பெங்களூருவில் சொல்லப்படும் அந்த வாசகத்தைச் சொல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. விராட் கோலி என்னிடம் 'அந்த வாசகத்தைச் சொல்ல உங்களுக்கு அனுமதி இல்லை' என்று கூறி இருக்கிறார்."
"ஆனால் இந்த ஆண்டு நாங்கள் நிச்சயம் முழுமை அடைவோம் என நான் உண்மையாக நம்புகிறேன். எனவே அனைவரும் காத்திருங்கள், இந்தப் பயணத்தை ரசிப்போம். இந்த ஆண்டு எது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்றால், அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடி வருகிறார்கள். எப்போதும் போல விராட் கோலி அல்லது முன்பு போல கிறிஸ் கெய்ல் என ஒன்று இரண்டு வீரர்கள் என இல்லாமல் அனைத்து வீரர்களும் அழுத்தத்திற்கு ஏற்ப நன்றாக விளையாடி வருகிறார்கள்" என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறி இருக்கிறார்.