பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை வர்ணனையாளர்கள் மோசமாகப் பேசியதாகத் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சாம்பியன் ஏபிடி வில்லியர்ஸ் கோபம் கொண்டிருக்கிறார். அவர் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி இருக்கிறார்.
தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் ஆதரவாளராக யூடியூபில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது கடைசிப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தபோது, அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 61 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார்.

அந்த பிட்ச் பேட்டிங் செய்ய எளிதாக இருந்ததால், ரிஷப் பண்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை விளாசினார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்தவர்கள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள், அவர்களால் இதைச் சமாளிக்க முடியாது எனவும் கூறினர்.
இதுபோன்ற தொடர் விமர்சனங்களால்தான் கோபம் கொண்டதாக ஏபிடி வில்லியர்ஸ் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் பேசியதாவது: "நேற்று இரவு நான் வர்ணனையாளர்கள் பேசியதைக் கேட்டேன். அது என்னைத் மிகவும் கோபப்படுத்தியது. எங்கள் அணி பந்து வீசியபோது அவர்களின் வர்ணனை எதிர்மறையாக இருந்தது."
"அவர்கள் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பௌலிங் அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், அவர்கள் இதைச் சமாளிக்க முடியாது எனவும், ஃபார்முக்கு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் தோல்விப் பாதைக்குச் செல்வதாகவும் கூறினர். ஒருவேளை இது நல்ல பேட்டிங் பிட்ச்சாகவும் இருக்கலாம் அல்லவா?"
"மிகவும் புத்திசாலித்தனமாகவும் துல்லியமாகவும் செயல்படும் வர்ணனையாளர்கள் அங்கே இருக்கிறார்கள். இது பேட்டிங் செய்ய சாதகமான இடமாக இருந்திருக்கலாம் என்பதை ஏன் நீங்கள் யோசிக்கவில்லை? அவர்கள் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சு மோசமான ஃபார்முக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்கள்."
"நான் அந்தப் போட்டியைப் பார்க்கும்போது சில வர்ணனையாளர்கள் குறிப்பிட்ட மாதிரி பேசுவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்களோ என்று தோன்றியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை கோப்பை வென்றதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் "இதோ பாருங்கள், அவர்களின் (ஆர்சிபி-யின்) பந்துவீச்சாளர்கள் சரியாக பந்து வீசவில்லை, அவர்கள் பயனற்றவர்கள்" எனச் சொல்வது சோம்பேறித்தனமாக உள்ளது."
"களத்தில் என்ன நடக்கிறது என்பதைச் சரியாக ஆய்வு செய்யாமல் இப்படிப் பேசக்கூடாது. ரிஷப் பண்ட் மிகவும் கடினமான பிட்ச்சில் 60 பந்துகளில் 118 ரன்கள் எடுக்க முடியாது. அனைத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களும் அந்தப் பிட்ச்சில் எளிதாக ரன் குவித்தார்கள். சில சமயம் பந்துவீச்சு மோசமாக இருந்தது."
"ஆனால், ஒட்டுமொத்தமாக அந்தப் பிட்ச்சைப் பார்க்கும்போது, ஒரு 227 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் அது பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை என்று சொல்ல முடியாது. அப்போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அந்தப் போட்டியில் இருந்து வெளியே செல்லவில்லை. அதை அவர்கள் வெற்றி பெற்று நிரூபித்தார்கள்," இவ்வாறு ஏபிடி வில்லியர்ஸ் வர்ணனையாளர்களை விமர்சனம் செய்திருக்கிறார்.