மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி தரப்பில் சாஹல், ரபாடா, அஸ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய 4 பவுலர்களையும் வாங்க முயற்சிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி திணறி வருகிறது. விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டூ பிளசிஸ், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான மேட்ச் வின்னர்கள் விளையாடிய போதும், தொடர்ந்து தோல்வியை மட்டுமே அடைந்து வருகிறது. இம்முறை ஆர்சிபி அணி பயிற்சியாளர் ஆண்டி பிளவர் திட்டத்துடன் களமிறங்கவுள்ளது.

ஏற்கனவே விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களையும் ரீடெய்ன் செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி ரூ.83 கோடி பர்ஸ் தொகையுடன் மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளது. இந்த நிலையில் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி கட்டாயம் வாங்க வேண்டிய 4 வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டி வில்லியர்ஸ் பேசுகையில், ஆர்சிபி அணி முதல் தேவையாக உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னரை இருக்கிறார். ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக ஆடிய சாஹலை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் அஸ்வின் இருவரையும் ஆர்சிபி அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் தங்களின் ஆட்டம் என்ன என்பதை நன்றாக அறிந்தவர்கள்.
அதேபோல் ஆர்சிபி அணி இம்முறை தென்னாப்பிரிக்கா அணியின் ககிசோ ரபாடாவை வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். தயவு செய்து அவரை வாங்குங்கள். முதல் முக்கியத்துவம் சாஹலுக்கும், அடுத்த முக்கியத்துவம் ககிசோ ரபாடாவுக்கும் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அதன்பின் அஸ்வினை வாங்க முயற்சிக்கலாம். அதன்பின் பவர் பிளேவில் அசத்தக் கூடிய அனுபவ வீரரான புவனேஷ்வர் குமாரை வாங்க முயற்சிக்க வேண்டும்.
இவர்கள் 4 பேரும் தான் என்னை பொறுத்தவரை ஆர்சிபி அணிக்கு தேவையானவர்கள். ஆர்சிபி அணியின் கைகளில் உள்ள பர்ஸ் தொகையை வைத்து 4 வீரர்களையும் வாங்கிவிட்டால், மீதமுள்ள தொகையை வைத்து மற்ற வீரர்கள் வாங்கி கொள்ளலாம். ஏனென்றால் சின்னச்சாமி மைதானத்தில் பவுலிங் செய்வது எளிதான விஷயமல்ல. அங்கு பவுலிங் செய்வதற்கு ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னஸ் இருக்க வேண்டும்.
திட்டங்களுக்கு ஏற்ப பவுலிங் செய்யக் கூடிய பவுலர்கள் தேவையாக இருக்கின்றனர். அதேபோல் கிரிக்கெட்டை பற்றி முழுமையான புரிதலும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவர்கள் 4 பவுலர்களும் சின்னச்சாமி மைதானத்தில் என்ன செய்தால், ரன்களை டிஃபெண்ட் செய்ய முடியும் என்பதை தெளிவாக அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.