மும்பை: மகாராஜா டிராபி டி20 தொடரில் சிமோகா லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான அபினவ் மனோகரை சிஎஸ்கே அணி வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. குஜராத் அணிக்காக விளையாடி வந்த இவர், ஃபினிஷிங்கில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியக் கூடியவர் என்பதால், மெகா ஏலத்தில் சிஎஸ்கே வாங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கான விதிமுறைகள் இன்னும் சில நாட்களில் பிசிசிஐ வெளியிடவுள்ளது. ஏற்கனவே அணிகளுக்கு 4 வீரர்களை ரீடெய்ன் செய்யவும், 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பர்ஸ் மதிப்பை ரூ.100 கோடியில் இருந்து ரூ.115 கோடியாக உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் மூலமாக ரீடெய்ன் செய்யப்படும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது. இதனிடையே மெகா ஏலம் என்பதால், இந்திய வீரர்களுக்கு அதிக கிராக்கி ஏற்படும். குறிப்பாக இந்திய ஏ அணி வீரர்கள், இளம் வீரர்கள், யு19 வீரர்களை வாங்க பல்வேறு அணிகளும் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு அணிகளும் இளம் இந்திய வீரர்களை வாங்க இப்போதே தயாராகி வருகின்றன.
டிஎன்பிஎல், மகாராஜா டிராபி, டெல்லி பிரீமியர் லீக், மகாராஷ்டிரா பிரீமியர் லீக், உபி பிரீமியர் லீக் என்று அத்தனை லீக்களையும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இதில் மகாராஜா டிராபியில் சிமோகா லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான அபினவ் மனோகரின் ஆட்டம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவர் ஏற்கனவே குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆனால் மெகா ஏலம் வருவதால், அவரை ரிலீஸ் செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. குஜராத் அணியில் கடந்த 3 சீசன்களில் போதுமான வாய்ப்புகள் அபினவ் மனோகருக்கு கிடைக்கவில்லை. ஃபினிஷிங் மற்றும் மிடில் ஆர்டரில் இறங்கி பொளந்து கட்டக் கூடிய வீரராக உருவாகி வரும் மனோகர், மகாராஜா டிராபியில் மட்டும் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 5 அரைசதம் உட்பட 507 ரன்களை விளாசி இருக்கிறார்.
அதிலும் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் மொத்தமாக 52 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இதுதான் அபினவ் மனோகர் மீது பலரின் கவனமும் திரும்ப காரணமாக மாறியுள்ளது. அதிரடியாக விளையாடுவதோடு, கன்சிஸ்டன்சியாக அபினவ் மனோகர் விளையாடுவது அவருக்கான கிராக்கியை அதிகரித்துள்ளது.
கடந்த ஏலத்தின் போது சிஎஸ்கே அணி ஃபினிஷிங் ரோலுக்காக இளம் வீரர் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது. அவர் திறமையான வீரர் என்றாலும், ஐபிஎல் தொடருக்கு இன்னும் தயாராகவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் சமீர் ரிஸ்வி-க்கு எப்படி சிஎஸ்கே அணி நிச்சயம் வாங்க வேண்டும் என்று தீவிரமாக ஏலத்தில் பெரிய தொகை கொடுத்ததோ, அதேபோல் அபினவ் மனோகருக்கும் பெரிய தொகைக்கு சென்றாலும் வாங்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏனென்றால் டேரல் மிட்சல், ரஹானே, சமீர் ரிஸ்வி, ஜடேஜா என்று சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் கடந்த சீசனில் மோசமாக அமைந்தது. சிவம் துபேவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் சிவம் துபேவுக்கு கீழ் மற்றொரு அதிரடி வீரரை வைத்து பேட்டிங் ஆர்டரை சிஎஸ்கே அணி கட்டமைக்க முயலும் என்று எதிர்பார்க்கலாம்.