சென்னை: தமிழக வீரரான அபிநவ் முகுந்த், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங்கில் இருக்கும் மிகப்பெரிய பலவீனத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். கிரிக்கெட் விவாத நிகழ்ச்சி ஒன்றில் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் பற்றிய விவாதம் நடந்தது. அப்போது அபிநவ் முகுந்த், வைபவ் சூர்யவன்ஷி எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை விளக்கினார்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பேட்டை பிடிக்கும்போது, ஆங்கில எழுத்தான 'வி' (V) என்ற வடிவத்தில் கைகள் இருக்கும் வகையில் தான் பேட்டை பிடிப்பார்கள். அதன் மூலம் பேட்டிங் அனைத்து நுணுக்கங்களையும் சரியாகச் செய்ய முடியும். பந்தை தடுத்து ஆடுவது, டிரைவ் செய்வது, பந்தை தூக்கி அடிக்க முயற்சிப்பது என அனைத்து வகையிலும் பந்தை அடிப்பதற்கு இது அடித்தளமாக இருக்கும்.

ஆனால் வைபவ் சூர்யவன்ஷி இதுபோல பேட்டைப் பிடிப்பதில்லை. அதனால் அவரால் பந்தை தடுத்து ஆடுவது என்பதே முடியாத விஷயம் என அபிநவ் முகுந்த் அவரது பலவீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் விவரிக்கையில், மற்ற பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டைப் பிடிக்கிறார்கள் என்பதைச் செய்து காட்டினார். ஆனால் வைபவ் சூர்யவன்ஷி பேட்டைப் பிடிக்கும்போது, பந்தை ஸ்விங் செய்து அடிப்பதற்காகவே பேட்டைப் பிடித்திருக்கிறார். அதனால் தான் அவர் சதம் அடித்த போதும் அனைத்து பந்துகளையும் எளிதாக அடிக்க முடிந்தது. அதே சமயம் மற்ற போட்டிகளில் அவர் விரைவிலேயே விக்கெட்டை இழப்பதற்குக் காரணம் அவரால் பந்தை தடுக்க முடியவில்லை என்பதுதான்.
மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் பிரியன்ஷ் ஆர்யாவும், வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடியாக ஆடுகிறார்கள். ஆனால் அவர்களால் பந்தை தடுத்து ஆட முடியாது, மேலே மட்டும் தான் அடிக்க முடியும் என அபிநவ் முகுந்த் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி, அதில் 155 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் அடித்த சதத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், 5 போட்டிகளில் 54 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 பந்துகளில் டக் அவுட் ஆனார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.