டெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் செய்யாத பிரம்மாண்டமான ஸ்ட்ரைக் ரேட் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அதிரடி துவக்கமளித்தார். துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து 41 பந்துகளில் 90 ரன்கள் கூட்டணி அமைத்தார்.
இந்த ஆண்டின் முடிவில் அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் 13 இன்னிங்ஸ்களில் 439 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 193.39 என்பதாக உள்ளது. இந்த ஆண்டு 300 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்தவர்களில் அபிஷேக் ஷர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டும் அபிஷேக் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாகவே இருந்தது. 2024 ஐபிஎல் தொடரில் அபிஷேக் ஷர்மா 16 இன்னிங்ஸ்களில் 484 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 204.21 என்பதாக இருந்தது.

இதன் மூலம் இரண்டு வெவ்வேறு ஐபிஎல் சீசன்களில் 400 ரன்கள் குவித்து 190-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த ஒரே வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை செய்திருக்கிறார் அபிஷேக் ஷர்மா. இதற்கு முன் கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே இரண்டு முறை 400 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்து 180-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக அபிஷேக் சர்மா மட்டுமே அந்த சாதனையை செய்திருக்கிறார். அதிலும் சற்று அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கிறார்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக அபிஷேக் ஷர்மா 400 ரன்கள் எடுத்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு அவர் 426 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 133.12 என்பதாக இருந்தது. அதன் பிறகு சிறப்பு பயிற்சிகளை செய்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் ஆலோசனைகளையும் பெற்று தற்போது அச்சுறுத்தும் அதிரடி பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார் அபிஷேக் ஷர்மா.
இந்த ஆண்டு அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்து இருந்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 141 ரன்கள் எடுத்தார். அதுவே ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும் 17 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் அமைந்தது.