லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி வீரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் 18 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 20 பந்துக்குள் நான்கு முறை அரை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை அபிஷேக் ஷர்மா படைத்திருக்கிறார்.
லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்கு இடையிலான ஆட்டம் இன்று லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. வாழ்வா சாவா என்ற கட்டத்தில் விளையாடி லக்னோ அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே இம்முறை பேட்டிங்கில் ஒரே மாதிரி அதிரடியாக ஆடாமல் தோல்வியை தழுவி வந்தது. இந்த சூழலில் கடைசி சில போட்டிகளில் தங்களது பழைய ஆட்டத்தை விளையாடி ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. இன்று அதர்வா தைடே உடன் தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மா களம் இறங்கினார்.
அதர்வா தாய்டே மூன்று பவுண்டரிகளை விளாசி 9 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார் மறுபுறம் அபிஷேக் ஷர்மா தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லக்னோ அணி பவுலர்களின் பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்த அவர் ரிஷப் பண்ட்க்கு வில்லனாக மாறினார். சிக்ஸர், பௌண்டரி என பறக்கவிட்ட அவர் 18 பந்துகளில் அரை சதம் விளாசினார். குறிப்பாக ரவி பிஸ்னாய் ஓவரை எதிர்கொண்ட அவர் தொடர்ந்து நான்கு சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார்.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 7.4 ஓவர்கள் எல்லாம் 100 ரன்களை கடந்து வலுவான நிலையில் இருந்தது. 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 59 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு சிக்ஸர்களும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 20 பந்துக்குள் 4 முறை அரைசதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன்பு நிக்கோலஸ் பூரான் நான்கு முறையும், டிராவிஸ் ஹெட் மூன்று முறையும், ஜேக் பிரேசர் மூன்று முறையும் 20 பந்துக்குள் அரை சதம் அடித்திருக்கிறார்கள். ரவி பிஸ்னாயின் ஒரு ஓவரில் 26 ரன்கள் சென்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஏழாவது ஓவரில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.