லக்னோ: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா, டி20 போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்துள்ளார். அவரது செயல்பாட்டைப் பார்த்து ரசிகர்கள் பிரமிப்படைந்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி, 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்தின்போது, அவர் டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 4,000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். மிகவும் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா, டி20 போட்டிகளில் இதுவரை 4,000 ரன்களை அடித்திருக்கிறார். இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா கடந்த ஆண்டுதான் இடம்பிடித்தார். அதற்குள் அவர் டி20 போட்டிகளில் 4,000 ரன்களை அடித்தது ஆச்சரியத்தை அளிக்கும் அதே வேளையில், அவர் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.

ஆண்கள் டி20 போட்டிகளில் 4,000 ரன்களை எடுத்த வீரர்களில், அதிக ஸ்ட்ரைக் ரேட் உடையவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் நியூசிலாந்தின் ஃபின் ஆலன் முதலிடத்தில் இருக்கிறார். அவர் டி20 போட்டிகளில் இதுவரை 4,070 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 170.93 ஆகும்.
இரண்டாவது இடத்தில் ஆண்ட்ரே ரசல் இருக்கிறார். அவர் 9,175 ரன்கள் குவித்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 168.85 ஆகும். மூன்றாவதாக அபிஷேக் ஷர்மா இடம்பிடித்திருக்கிறார். அவர் 4,002 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 166.05 ஆகும்.
இந்த பட்டியலில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அபிஷேக் ஷர்மா இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிப்பது இல்லை என்ற விமர்சனம் இருந்தாலும் அதிக ஸ்டிரைக் ரேட்டில் ஆடுவதன் மூலம் தனது பேட்டிங் திறனை நிரூபித்து இருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 94 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஆடிய பெங்களூரு அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து சன்ரைசர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.