மும்பை: 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சிக்கியது. இதன் காரணமாக 2016 மற்றும் 2017 ஆகிய 2 ஆண்டுகளிலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதன்பின் 2018 ஆண்டு தான் இரு அணிகளும் மீண்டும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் கம்பேக் கொடுத்தன.
இதன்பின் ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் எழவில்லை. இதற்காக பிரத்யேக கமிட்டி மற்றும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் வீரர்களை மேட்ச் பிக்சிங் செய்வதற்கு அணுகும் சில புக்கிகளையும் அடையாளம் கண்டு வீரர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் தரப்பில் ராஜஸ்தான் அணி மீது மீண்டும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதாவது டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 9 ரன்களை சேர்க்க முடியாமல் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் சென்றது. அதிலும் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அதேபோல் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ராஜஸ்தான் கடைசி ஓவரில் தோல்வி அடைந்தது.
இதனால் ராஜஸ்தான் அணி மேட்ச் பிக்சிங் செய்ததாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் சீனியர் உறுப்பினரான ஜெய்தீப் பிஹானி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் கடுமையான எதிர்வினையாற்றி இருக்கிறது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள ஜெய்தீப் பிஹானி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிசிசிஐ தரப்பில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் கலைக்கப்பட்டு, தற்போது ராஜஸ்தான் மாநில ஸ்போர்ட்ஸ் கவுன்சில் என்ற புதிய சங்கம் உருவாக்கப்பட்டு பிசிசிஐ கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு பின் அணி நிர்வாகம் டிக்கெட்டுகள் விற்பனையில் கடுமை காட்டியதே காரணமாக கூறப்படுகிறது.
அதாவது ராஜஸ்தான் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்குக் அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு 1,800 டிக்கெட்டுகளை அளிக்க வேண்டும். அதனை இம்முறை அணி நிர்வாகங்களில் 1000 முதல் 1,200 டிக்கெட்டுகளாக குறைக்கப்பட்டன. இதில் தொடங்கிய பிரச்சனையும் ஜெய்தீப் பிஹானியின் குற்றச்சாட்டுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.