லண்டன்: இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா இணை வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி 2வது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்ட நிலையில், பிரசவம் லண்டனில் நடத்தப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்கு பின் லண்டன் சென்ற அனுஷ்கா சர்மா, அதன்பின் இந்தியாவுக்கு வரவில்லை.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண்பதற்காக அனுஷ்கா சர்மா அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அதேபோல் டி20 உலகக்கோப்பை கொண்டாட்டம் முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே விராட் கோலி மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டார். அதன்பின் விராட் கோலியும் இந்தியா வரவில்லை.

இதன் காரணமாக விராட் கோலி - அனுஷ்கா சர்மா இணை லண்டனிலேயே செட்டிலாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் அதுவே சரியானது என்பதால், இனி இந்தியாவுக்கு விராட் கோலி கிரிக்கெட் விளையாட மட்டுமே வருவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார்.
அதில், அனுஷ்கா சர்மாவை சந்திப்பதற்கான டிக்கெட்டை வெல்லுங்கள் என்ற பதிவுடன், விரைவில் சந்திப்போம் என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனால் அனுஷ்கா சர்மா மும்பை திரும்ப உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. திடீரென அனுஷ்கா சர்மா ஊர் திரும்புவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த மாதம் முதல் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் நடக்கவுள்ளது. அதன்பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி புறப்படவுள்ளது. விராட் கோலிக்கு தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால், அனுஷ்கா சர்மாவும் இந்தியா வர தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விராட் கோலியின் மகன் அகாய் கோலி முதல் முறையாக இந்தியா வரவுள்ளார். விராட் கோலி - அனுஷ்கா சர்மா இணை இதுவரை தங்கள் மகளின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனால் மகனின் புகைப்படம் வெளி வராமல் இருக்கவும் வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.