மும்பை: இந்த ஆண்டின் சிறந்த கம்பேக் என சொல்லும் அளவுக்கு ஒரு சம்பவத்தை செய்து இருக்கிறார் அஜிங்கியா ரஹானே. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அஜிங்கியா ரஹானே நீக்கப்பட்டு இருந்தார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரது அடிப்படை விலையான 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.
அஜிங்கியா ரஹானே இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரிலும் மோசமான நிலையை அடைந்து விட்டார் எனவும், அவரது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக ரசிகர்கள் சோகத்துடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் 2024 சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் யாரும் எதிர்பாராத விஷயத்தை செய்து மிரள வைத்து இருக்கிறார் அஜிங்கியா ரஹானே. இளம் வீரர்கள் பலரும் சையது முஷ்டாக் அலி தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி வரும் நிலையில் அவர்கள் அனைவரையும் முந்தி அதிக ரன்கள் குவித்த வீரராக மாறி இருக்கிறார் ரஹானே.
அதிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 169 ஆக உள்ளது. அவர் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 432 ரன்கள் எடுத்து இருக்கிறார். ஐந்து அரைசதங்களை அடித்து தெறிக்க விட்டுள்ளார். 2024 சையது முஷ்டாக் அலி தொடரின் அரை இறுதி போட்டியில் பரோடா அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடிய அஜிங்கியா ரஹானே 6 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த அரை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 17.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ரஹானே 98 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து இருந்தனர்.
அஜிங்கியா ரஹானே சையது முஷ்டாக் அலி தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கும் நிலையில் அவர் 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.