மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் நடத்துவது தொடர்பாக 10 அணிகள் உடன் நிர்வாகிகளை பிசிசிஐ இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. இதில், ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு வீரர்களை எப்படி தேர்வு செய்வது? எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுப்பது? ஆர் டி எம் கார்டு (Right to match card) வசதி வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் பல்வேறு அணிகளும் தங்களுடைய நிறை குறைகளை பிசிசிஐ இடம் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒட்டுமொத்த அணிகளும் தற்போது மெகா ஏலத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். தாங்கள் கஷ்டப்பட்டு அணியை கட்டமைத்து வீரர்கள் செட்டாவதற்குள் அடுத்த மெகா ஏலம் வந்து விடுகிறது.

இதன் மூலம் பல வீரர்கள் அணியை விட்டு செல்லும் நிலை ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அணி நிர்வாகிகள், இதனை தடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இனி மெகா ஏலத்தை நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு அனைத்து ஐபிஎல் அணிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
இதே போன்று வீரர்களுக்கான சம்பளத்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள அணி நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சில இளம் வீரர்கள் குறைவான ஊதியத்தில் அணிக்குள் வந்து பின் தங்களுடைய திறமையை நிரூபித்து கூடுதல் பணத்திற்காக மற்ற அணிகளுக்கு செல்ல முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி வந்தனர்.
இதனை தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை ஊதியத்தை மாற்றி அமைக்க அணி நிர்வாகத்திற்கு உரிமையை தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும் வீரர்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைக்கும் போது அது வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என்றும் அது ஐபிஎல் நிர்வாகத்தின் வழியாகவே நடத்திக் கொள்ளலாம் என்றும் அணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்று எத்தனை வீரர்களை ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துக் கொள்வது என்பதில் பல அணிகளுக்கு மத்தியில் மாற்றுக்கருத்து ஏற்பட்டது. சில அணிகள் ஐந்து வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், சில அணிகள் எட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
எனினும் சில அணிகள் எந்த வீரர்களுமே தக்க வைத்துக் கொள்ளாமல் எட்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்த ஐபிஎல் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆர் டி எம் கார்டு என்னவென்றால் உதாரணத்திற்கு சிஎஸ்கே சிவம் துபே வை தக்க வைக்காமல் வெளியே அனுப்பிவிடுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது மெகா ஏலத்தில் ஆர் சி பி அணி சிவம் துபே-வை எட்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்க போகிறது என வைத்துக் கொள்வோம்.
அப்போது சிஎஸ்கே அணி இந்த ஆர் டி எம் கார்டை பயன்படுத்தி சிவம் துபேவை எட்டு கோடி ரூபாய் கொடுத்து தங்கள் அணியிலே தக்க வைத்துக் கொள்ளலாம். இதேபோன்று இம்பாக்ட் பிளேயர் விதி ஐபிஎல் இன் சுவாரசியத்தை கெடுப்பதாக சில அணிகள் குற்றம்சாட்டி இருக்கின்றது. இதனால் அடுத்த சீசனில் இந்த விதி இருக்குமா இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.