மும்பை: தென்னாப்பிரிக்க டி20 தொடரான எஸ்ஏ 20 (SA20) தொடரில் விராட் கோலி மற்றும் பும்ரா பங்கேற்றால் அந்த தொடர் வேறு ஒரு இடத்தை அடையும் என்றும், மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை பெறும் என்றும் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் ஆலன் டொனால்ட் கூறி இருக்கிறார்.
கடந்த 16 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐபிஎல்) தொடர். டி20 போட்டிகள் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்த அப்போதைய பிசிசிஐ துணை தலைவர் லலித் மோடியால் வடிவமைக்கப்பட்டது தான் ஐபிஎல்.

அந்த ஐபிஎல் தொடரின் வெற்றியை பார்த்து மற்ற நாடுகளும் தங்களுக்கு என ஒரு டி20 தொடரை வடிவமைத்தனர். ஆனால் எந்த ஒரு டி20 தொடரும் ஐபிஎல்-க்கு அருகில் கூட வர முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தான்.
இந்தியாவில் இருக்கும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களால் தான் ஐபிஎல் தொடர் உச்சத்தை எட்டி இருக்கிறது. மற்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடலாம். ஆனால், இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாட முடியாது. பிசிசிஐ அது போன்ற விதிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் காரணமாகவே இந்திய வீரர்கள் விளையாடாத மற்ற டி20 தொடர்கள் வளர்ச்சி அடைய முடியாமல் நிற்கின்றன. ஒரு இந்திய வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் மட்டுமே மற்ற நாடுகளில் நடக்கும் டி20 தொடரில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எஸ்ஏ 20 தொடர் பற்றி பத்திரிகையாளர் ஒருவர் ஆலன் டொனால்ட் -இடம் ஒரு கேள்வியை எழுப்பினார். இந்திய அணியைச் சேர்ந்த ஒரு பேட்ஸ்மேன் மற்றும் ஒரு பவுலரை எஸ்ஏ20 தொடரில் விளையாட தேர்வு செய்யலாம் என்றால் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்வியை எதிர்கொண்ட உடன் ஒரு நிமிடம் திகைத்து நின்ற ஆலன் டொனால்ட், பின்னர் விராட் கோலி மற்றும் பும்ராவை தான் தேர்வு செய்வேன் என்றார். அவர்கள் இருவரும் எஸ்ஏ20 தொடரில் விளையாடினால் அந்த தொடர் வேறு ஒரு தளத்துக்கு செல்லும் என உற்சாகமாக கூறினார். ஆனால், அது நடக்க வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம்.