பெங்களூர்: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில் ஆர்சிபி அணி சார்பாக நடத்தப்பட்ட ட்ரையல்ஸில் கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடிய சில வீரர்கள் பங்கேற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஜெட்டா நகரில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்தில் சரியான வீரர்களை வாங்க வேண்டும் என்பதற்காக 10 அணிகளின் நிர்வாகிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஒரு பக்கம் மாதிரி ஏலத்தை நடத்தி வரும் நிர்வாகிகள், இன்னொரு பக்கம் இளம் வீரர்களை களத்தில் விளையாடவிட்டு திறமையானவர்களை கண்டறிந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஆர்சிபி அணி தரப்பில் இம்முறை பயிற்சியாளர்கள் குழு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்முறை தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர்-க்கு கீழ் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் மற்றும் பவுலிங் பயிற்சியாளராக ஓம்கார் சல்வி இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் குறித்து நன்றாக அறிந்தவர்கள்.
ஓம்கார் சல்வி கேகேஆர் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தவர். அதேபோல் மும்பை ரஞ்சி டிராபி அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர். தினேஷ் கார்த்திக் மற்றும் ஓம்கார் சல்வி இருவரும் கேகேஆர் அணிக்காக ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ளனர். இதனால் தரமான உள்ளூர் திறமையாளர்களை ஆர்சிபி அணிக்குள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பயிற்சியாளர்கள் குழு இணைந்துள்ள நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகம் தரப்பில் இளம் வீரர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ட்ரையல்ஸில் கேகேஆர் அணியின் இளம் நட்சத்திர வீரராக அறியப்பட்ட ஆங்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் சிஎஸ்கே அணியின் சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக விளையாடிய ரகுவன்ஷி 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 163 ரன்களை விளாசினார். அதேபோல் சிஎஸ்கே அணிக்காக கடைசி சில போட்டிகளில் விளையாடிய சிமர்ஜீத் சிங், மணிக்கு 150 கிமீ வேகத்திற்கும் அதிகமாக பவுலிங் செய்து ஆச்சரியம் கொடுத்தார். இதனால் ஆர்சிபி அணி இம்முறை அனுபவம் வாய்ந்த உள்ளூர் வீரர்கள் பக்கம் திரும்பி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ஓம்கார் சல்வி இருவரும் தான் காரணம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆர்சிபி அணி வழக்கமாக யாருக்கும் தெரியாத ஊரில் இருந்து சில வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வைத்து, அவர்களை நல்ல தொகை கொடுத்து வாங்கும். ஆனால் அவர்களுக்கு பிளேயிங் லெவனில் கூட இடம் கொடுக்கப்படாது. ஆனால் இம்முறை பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் அளவிற்கான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.