கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளை பெற்றிருக்கும் நிலையில், அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என அனில் கும்ப்ளே சுட்டிக்காட்டி இருக்கிறார். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என கூறப்பட்டு வரும் நிலையில், நான்காவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இணைந்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. ஏனெனில் 16 புள்ளிகளை பெறும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த ஆண்டு செல்ல முடியும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் தங்களுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.

ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது 7 புள்ளிகளை பெற்றிருக்கும் நிலையில், மீதமுள்ள ஐந்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மொத்தம் 17 புள்ளிகளை பெற முடியும். அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் முற்றிலுமாகப் போய்விடவில்லை. ஆனாலும் அந்த அணி பிளே ஆஃப் செல்லாது என அனில் கும்ப்ளே சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது பற்றி பேசுகையில், "அந்த அணி பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்த அணி இன்னும் தங்களின் சிறந்த பிளேயிங் லெவன் என்ன என்பதையே கண்டுபிடிக்கவில்லை" என்று அனில் கும்ப்ளே கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் முன்னதாக தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள், இன்னும் ஐந்து போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை. அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு மாற்றங்களை செய்தார்கள். மாற்று வீரராக வந்த சேத்தன் சக்காரியாவை ஆட வைத்தார்கள். ரோவ்மன் பாவெல் கொல்கத்தா அணிக்காக அறிமுகமானார்."
"கொல்கத்தா நிர்வாகம் இதே அணியைத் தொடர்ந்து ஆட வைப்பார்களா என்ற கேள்வி உள்ளது. சேத்தன் சக்காரியா நேற்று பந்துவீசினார். ரோவ்மன் பாவெல் அடுத்த போட்டியிலும் விளையாட வேண்டும்" இவ்வாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேயிங் லெவனில் அதிக சிக்கலுடன் இருப்பதை அனில் கும்ப்ளே சுட்டிக்காட்டி இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும்பாலான போட்டிகளில் 9 அல்லது 10 வீரர்களை தொடர்ந்து தக்கவைத்து ஆடியது. ஆடுகளத்திற்கு ஏற்பவும், காயங்களின் அடிப்படையிலும் ஒன்று இரண்டு வீரர்கள் தான் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அந்த அணி ஒரு போட்டியில் வெல்வதும், இரண்டு போட்டிகளில் தோற்பதுமாக உள்ளது.