அகமதாபாத்: அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரரான அன்மோல்ப்ரீத் சிங் படைத்துள்ளார். கடந்த சில சீசன்களாக ஐதராபாத் அணிக்காக ஆடி வந்த இவரை, அண்மையில் முடிந்த மெகா ஏலத்தில் எந்த அணிகளும் வாங்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா மற்றும் உர்வில் படேல் இருவரும் 28 பந்துகளில் சதமடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தனர். இதில் அபிஷேக் சர்மா இந்திய அணிக்காக ஆடி இருந்தாலும், உர்வில் படேல் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இதன்பின் இவர் ஐபிஎல் அணிகளால் மெகா ஏலத்தில் வாங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடர் தொடங்கியுள்ள சூழலில், முதல் நாள் லீக் போட்டிகளிலேயே பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இன்றைய ஆட்டத்தில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய அருணாச்சலப் பிரதேச அணி 48.4 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
பஞ்சாப் அணி தரப்பில் அ?ஸ்வனி குமார் மற்றும் மார்க்கண்டே இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அபிஷேக் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பிரப்சிம்ரன் சிங்குடன் அன்மோப்ரீத் சிங் கூட்டணி சேர்ந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அவர், 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
இதன் காரணமாக 12.5 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய அன்மோப்ரீத் சிங் 45 பந்துகளில் 9 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 115 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். 35 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை அன்மோல்ப்ரீத் சிங் படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக யூசுப் பதான் 40 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை அன்மோல்ப்ரீத் சிங் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லிஸ்ட் ஏ மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட 3வது சதம் இதுவாகும். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவிஞ் மெக்கர்க் 29 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில், டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் சதமடித்து 2வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் அன்மோல்ப்ரீத் சிங் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தாலும், ஐபிஎல் தொடரில் பெரிதாக தடம் பதிக்கவில்லை. ஆனால் இம்முறை மெகா ஏலத்தில் யாரும் வாங்காத நிலையில், தனது பேட்டிங் ஃபார்மையும், திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.