முல்லான்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து படுமோசமாக சரிவை சந்தித்து வந்தபோது, விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா அதை சிரித்து கொண்டாடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் நடக்கத் தொடங்கின. முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும் இருந்தன.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதலில் பேட்டிங் செய்த அந்த அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. முதல் மூன்று விக்கெட்டுகளை 30 ரன்கள் எடுத்த நிலையில் இழந்தது பஞ்சாப் அணி. அதன் பிறகு சுதாரிப்பாக ஆடும் என எதிர்பார்த்த நிலையில், பதற்றம் அடைந்த பஞ்சாப் வீரர்கள் வரிசையாக தங்களின் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் 60 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. அப்போது விராட் கோலி பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சியை வெறித்தனமாகக் கொண்டாடினார். மறுபுறம் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீழ்ச்சியைக் கொண்டாடி வந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் அந்த அணி ஏழு விக்கெட்டுகளை இழந்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அது ஒரு வகையில் பஞ்சாப் அணியை நையாண்டி செய்யும் வகையில் இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தான் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெறும் 10 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை எட்டியது.
போட்டி முடிந்தவுடன், மைதானத்தில் இருந்த விராட் கோலி அனுஷ்கா சர்மாவைப் பார்த்து "இன்னும் ஒரு போட்டிதான்" என சைகை செய்தார். அதாவது, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லும். அதைத்தான் விராட் கோலி சைகை மூலம் செய்து காட்டினார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.