மும்பை: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது. இதனால் ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் உரிமையாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் எத்தனை வீரர்களை ரீ-டெய்ன் செய்வதை அனுமதிக்கலாம் என்று இதுவரை முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
இதனிடையே 2024ஆம் ஆண்டு நடந்த சில கசப்பான அனுபவங்கள் காரணமாக பல்வேறு வீரர்களும் தங்களை ரீ-டெய்ன் செய்ய வேண்டாம் என்று அணி நிர்வாகங்களிடம் கூறி வருவது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மைதானத்தில் அத்தனை கேமராக்கள் முன்னிருந்தும் கேஎல் ராகுலை விளாசி தள்ளினார்.

அதேபோல் டெல்லி அணி நிர்வாகம் 7 ஆண்டுகளாக பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு கேப்டனுக்கான தேவை எழுந்துள்ளது. அதேபோல் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனியுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார்.
அதேபோல் சிஎஸ்கே சிஓஓ சுந்தர் ராமனும் ரிஷப் பண்ட் உடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கிறார். அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடப்பதால், தோனி அடுத்த சீசனில் விளையாடுவது சந்தேகம் தான். இதனால் சிஎஸ்கே அணிக்கு இந்திய விக்கெட் கீப்பரின் தேவை உள்ளது. இதனால் டெல்லி அணி நிர்வாகிகள் ரிஷப் பண்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
ஒருவேளை ரிஷப் பண்ட் உடன் டெல்லி அணி நிர்வாகம் உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால், நிச்சயம் அவர் சிஎஸ்கே அணிக்கு வருவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் கேஎல் ராகுல் அடுத்த சீசனில் தனது முதல் ஐபிஎல் அணியான ஆர்சிபி அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு கேஎல் ராகுல் விளையாடியுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆர்சிபி அணி நிர்வாகமும் கேஎல் ராகுலின் நட்சத்திர அந்தஸ்து மற்றும் உள்ளூர் அடையாளத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். விராட் கோலி ஓய்வு பெறும் பட்சத்தில், அவரது இடத்தில் குட்டி கோலி என்று அழைக்கப்படும் கேஎல் ராகுல் சரியான மாற்றாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. மெகா ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் ரீ-டெய்ன் செய்த வீரர்களை அறிவிக்க வேண்டும். அப்போது அனைத்து விஷயங்களும் கிட்டத்தட்ட உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.