சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார் என்பதை சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துவிட்டது. அந்தப் பட்டியலில் இலங்கை அணியின் இளம் வீரரான மதீஷா பதிரானாவை முதல் வீரராக சிஎஸ்கே அணி ரீடெய்ன் செய்து, அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் 2 மாதங்களில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு மினி ஏலத்தை துபாயில் உள்ள கோகோ-கோலா அரங்கில் பிசிசிஐ நடத்திய நிலையில், இம்முறை சவுதி அரேபியாவில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா பயணிப்பதற்கு முன்பாகவே ஏலத்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஐபிஎல் தொடருக்கான விதிகளை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது. இதனிடையே ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் எந்த அணிக்கும் இம்முறையும் ஆர்டிஎம் வாய்ப்பை அளிக்க பிசிசிஐ விரும்பவில்லை.
இதனால் 5 வீரர்களில் எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்களை வேண்டுமானாலும் ரீடெய்ன் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி தரப்பில் 5 வீரர்களின் பட்டியலில் 3 பெயர்கள் யார் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும் ஒரே மாதிரியான ஒப்பந்தத்தை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பின் 3வது வீரராக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவை சிஎஸ்கே அணி ரீடெய்ன் செய்ய முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல், அவருடன் ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பாக பதிரானாவின் மேனேஜரான அமிலா, சென்னை வந்து சென்றதோடு மட்டுமல்லாமல், சிறப்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் பதிரானாவை சிஎஸ்கே அணி நிர்வாகம் ரீடெய்ன் செய்ததே அந்த சிறப்பாக அறிவிப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த 3 சீசன்களாக பதிரானாவை சொந்த பையனை போலவே தோனி கண்காணித்து வருகிறார். இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா, விராட் கோலியை விடவும் பதிரானாவுக்காக தோனி களத்தில் நின்றது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
இதனால் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் தனது பெயர் இருப்பதை காட்டிலும், பதிரானாவின் பெயர் முதலில் இருக்க வேண்டும் என்று விரும்பியதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதை சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.