சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், இம்முறை எத்தனை வீரர்களை ஒவ்வொரு அணியாலும் தக்க வைத்து கொள்ள முடியும் என்று இதுவரை முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக வரும் 31ஆம் தேதி பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இம்முறை தக்க வைக்கப்படும் வீரர்களின் ஊதியத்தை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு அணிக்கும் கூடுதல் பர்ஸ் தொகை கொடுக்க பிசிசிஐ ஆலோசிக்க உள்ளது. மேலும் ஐபிஎல் மெகா ஏலத்தை எங்கு நடத்தலாம், எப்படி நடத்தலாம் என்ற விவாதங்களும் நடக்கவுள்ளன. இதனால் ஐபிஎல் அணிகள் பயிற்சியாளர்கள் குழுவை ஒருங்கிணைக்க ஆலோசித்து வருகின்றனர்.

ஏற்கனவே டெல்லி அணி தரப்பில் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் குஜராத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் விக்ரம் சொலங்கி ஆகியோர் விலக உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் அந்த இடத்திற்கு இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங்கை கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், யுவராஜ் சிங்கின் அகாடமியில் தான் பயிற்சி பெற்றார். அதேபோல் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மாவும் யுவராஜ் சிங்கின் சிஷ்யன் தான்.
இளம் வீரர்களை சரியாக வழிநடத்தி வரும் யுவராஜ் சிங், பயிற்சியாளராகவும் அசத்துவார் என்று குஜராத் அணி நிர்வாகம் நம்புவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்து கேகேஆர் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்திருப்பதால், குஜராத் அணியின் பார்வை யுவராஜ் சிங் பக்கம் திரும்பியுள்ளது.
சுப்மன் கில் கேப்டனாக இருப்பதால், யுவராஜ் சிங்கால் அனைத்து முடிவுகளையும் சுதந்திரமாக எடுக்க முடியும். அதேபோல் மெகா ஏலத்திற்கு முன்பாக தலைமைப் பயிற்சியாளரை ஒப்பந்தம் செய்து அடுத்தக்கட்ட பணிகளை குஜராத் அணி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, மெகா ஏலத்தில் மீண்டும் சிறந்த அணியை கட்டமைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.