சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வரும் நிலையில் அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அது பற்றி பேசிய அந்த அணியில் இடம்பெற்று இருக்கும் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், "யார் ஆக்கபூர்வமான விமர்சனத்தை செய்கிறார்கள், யார் விஷத்தைக் கக்குகிறார்கள் என்பதை எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடலாம்" எனவும், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் வீரர்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என தினேஷ் கார்த்திக் தன்னிடம் சொன்னதாகவும்" பேசியிருக்கிறார்.
அவரது இந்த பேச்சு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும் இடம் பெற்றார். அதில் அவரது செயல்பாடுகள் பெரிய அளவில் திருப்திகரமாக இல்லை.

இதுவரை அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தி இருக்கிறார். ஒரு ஓவருக்கு சராசரியாக 9.88 ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் அஸ்வினை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அது பற்றி பேசிய அவர், "யாரும் தோற்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள். நான் இது போன்ற கேலி, கிண்டல்களைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை."
"நீங்கள் கேலி செய்யக்கூடாது என்று சொல்கிறீர்கள், ஆனால் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. மக்கள் நம்மைப் பற்றி பேசுகிறார்கள், நமது தவறுகளை சொல்கிறார்கள் என்றால் நம் மீதான அக்கறையாகவும் அது இருக்கலாம். அதை நான் ஆக்கபூர்வமான விமர்சனமாக எடுத்துக் கொள்கிறேன். ஆனால் சில பேர் வேண்டுமென்றே நம் மீது வன்மத்தைக் கக்குவார்கள்."
"யார் ஆக்கபூர்வமான விமர்சனத்தைச் சொல்கிறார்கள், யார் விஷத்தைக் கக்குகிறார்கள் என்பதை எளிதாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இன்றைய நாளை விட நாளை நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைக்கிறேன். அது தான் எனது வாழ்க்கையின் மந்திரமாக உள்ளது. நான் மற்ற விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை."
"நம் மீது அன்பு உள்ள மக்கள் நம்மைப் பற்றி பேசும்போது, நமது செயல்பாட்டைப் பற்றி பேசும்போது அவர்கள் உண்மையாக பேசுகிறார்கள். எனது தந்தை இப்போதும் கூட நான் ஆட்டம் இழந்து விட்டால் என்னை திட்டுவார். எனது பெற்றோர் என்னை இப்போதும் திட்டுவார்கள். நம்மீது அன்பு செலுத்துபவர்கள் இடமிருந்து வரும் விமர்சனம் நிச்சயம் நல்லது தான்."
"ரசிகர்களாக இருப்பதும் அத்தனை எளிதல்ல. நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தபோது முற்றிலுமாக போட்டிகளில் தான் கவனம் செலுத்தினேன். வெளியே வந்து எதுவும் பேச மாட்டேன். சமூக வலைதளங்களையும் தவிர்த்து இருந்தேன். எதைப்பற்றியும் கருத்து சொல்ல மாட்டேன்."
"சில சமயம் எனது நண்பர்கள் 'நீ கவலைப்படாதே, நன்றாக ஆடுவாய்' என்று சொல்வார்கள். அது போன்ற செய்திகளை கூட எனக்கு அனுப்பாதீர்கள். வெளியே என்ன நடக்கிறது என்று எனக்கு தெரிய வேண்டாம் என்று சொல்வேன். சில பேர் நம் மீது உள்ள கோபத்தில் நம்மை விமர்சித்துக் கொண்டு இருப்பார்கள்."
"ரசிகர்களைப் பற்றி பேசும்போது, கடந்த ஆண்டு நான் தினேஷ் கார்த்திக் உடன் 'குட்டி ஸ்டோரி' என்ற நிகழ்ச்சியில் பேசினேன். அப்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்களைப் பற்றி சொன்னார். ஆர்சிபி ரசிகர்கள் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தங்கள் வீரர்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று அவர் சொன்னார்."
"எனவே, ரசிகர்கள் செய்யும் விமர்சனம் உண்மையானதாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு வீரரும் தவறு செய்ய வேண்டும் என்பதற்காக ஆடுகளத்துக்கு செல்வதில்லை. நீங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை சொல்லலாம், கேலியும் செய்யலாம். அதே சமயம் ரசிகர்கள் தங்கள் வீரர்களை கைவிட்டு விடக்கூடாது. அவர்கள்தான் உண்மையான ரசிகர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.