மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சவுதி அரேபியாவின் மற்றொரு பிரதான நகரமான ஜெட்டாவில் இந்த மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்று மற்றும் நான்காவது நாட்கள் நடைபெறும் அதே நேரத்தில் இந்த மெகா ஏலம் நடக்க உள்ளது. இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த உடன் மதிய நேரத்தில் இந்திய நேரப்படி மெகா ஏலத்தை தொடக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்காத வீரர்களுக்கு அடுத்த மினி ஏலத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்று பிசிசிஐ அறிவித்தது. இதனால் 1574 வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் 1165 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். 409 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இத்தாலி, கனடா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எல்லாம் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். மொத்தமாக 204 வீரர்களுக்கான தேர்வு இந்த மெகா ஏலத்தில் நடைபெற இருக்கின்றது.
மெகா ஏலத்திற்கு முன்பு பத்து அணிகளும் சேர்த்து இதுவரை 46 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் அணியில் ஹென்றிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கும், கோலி மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் தலா 21 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பஞ்சாப்,கொல்கத்தா, ஆர்சிபி நடப்பு சாம்பியன் கே கே ஆர்,டெல்லி ஆகிய ஐந்து அணிகள் தங்களுடைய கேப்டனை விடுவித்து இருப்பதால் இந்த மெகா ஏலத்தில் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க இருக்கின்றார்கள். இந்த மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்,ஸ்ரேயாஸ், கே எல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் அதிக அளவுக்கு விற்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணி 110 கோடி ரூபாயுடன் ஏலத்தில் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.