ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணி தங்களுடைய புதிய கேப்டனை தற்போது அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் 9 அணிகளும் தங்களுடைய கேப்டன் யார் என்பதை அறிவித்த நிலையில் போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரமே அதிகபட்சமாக உள்ள நிலையில் டெல்லி அணி மட்டும் கேப்டன் யார் என்பதை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் டெல்லி அணியில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அக்சர் பட்டேலை அந்த அணி நிர்வாகம் நியமித்திருக்கிறது. இதனால் ராகுல் புறக்கணிக்கப்பட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் ராகுல் தான் தமக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும், தான் அணியில் சாதாரண வீரராக இருந்தே பங்களிக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். இதன் காரணமாக தான் அக்சர் பட்டேலுக்கு கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிராக டெல்லி அணி விளையாடிய போது ரிஷப் பண்ட், ஸ்லோ ஓவர்ரேட் காரணமாக ஒரு போட்டியில் தடை பெற்றார்.
அப்போது அக்சர் பட்டேல் தான் கேப்டன் பதவியை ஏற்றார்.எனினும் அந்த போட்டிகள் ஆர் சி பி அணி தோல்வியை தழுவி இருக்கிறது. அக்சர் பட்டேல் சொந்த மாநிலமான குஜராத் அணிக்கு 16 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். மேலும் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் ஆகவும் அக்சர் பட்டேல் செயல்படுகிறார்.
இதனால் அக்சர் பட்டேலுக்கு கேப்டன் அனுபவம் என்பது புதிது கிடையாது. அக்சர் பட்டேலை 16 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து டெல்லி அணி ஏலத்திற்கு முன்பே தக்க வைத்துக் கொண்டது. இதுவரை அக்சர் பட்டேல் 274 டி20 போட்டிகள் விளையாடி பேட்டிங்கில் 3088 ரன்களும், பந்துவீச்சில் 239 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தாம் கேப்டன் பதவிக்கு நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்சர் பட்டேல், டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது மிகவும் பெருமையாக கருதுவதாக கூறியுள்ளார். தம்மை கேப்டனாக நியமித்த அணி உரிமையாளர்கள் மற்றும் அணியில் உள்ள பயிற்சியாளர் குழு உள்ளிட்ட அனைவரும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நான் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு நல்ல மனிதனாகவும் டெல்லி அணியில் இருந்த போது வளர்ந்ததாக கூறியுள்ள அக்சர்பட்டேல் அணியை தலைமை தாங்க நம்பிக்கையுடனும் உறுதியாகவும் இருப்பதாக கூறியுள்ளார். எங்கள் அணியில் பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் திறமை வாய்ந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு நல்ல அணியை உருவாக்கி இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள அக்சர் பட்டேல், எங்கள் அணியில் உள்ளே பல லீடர்ஸ் இருப்பதால் அவர்களுடைய உதவி எனக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.